இர்ஷாத் முஹம்மது
மாறுபட்ட கலாசாரப் பின்னணிகள், வேறுபட்ட மொழி பேசும் பின்புலம், மாறுபட்ட செயல் கொண்டவர்கள் போன்ற காரணங்களால் சிங்கப்பூர் வகுப்புகள் பன்முகத்தன்மையுடன் விளங்குகின்றன. எனவே, பாலர் பள்ளிகளில் அதற்கேற்ற கற்பித்தல் அணுகுமுறை தேவை என பாலர் பள்ளி தமிழாசிரியர்களுக்கான பயிலரங்கில் பகிரப்பட்டது.
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஏற்பாட்டில் 'ஸூம்' மெய்நிகர் தளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நான்கு மணி நேர பயிலரங்கில் 80க்கும் மேற்பட்ட பாலர் பள்ளி தமிழ் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தமிழாசிரியர்கள் தங்கள் கற்பித்தல் அனுபவங்களைப் பகிர்ந்ததோடு எவ்வாறு மாற்றங்களை மேற்கொண்டு கற்பித்தலை மேம்படுத்த முடியும் என்று அறிந்துகொண்டனர்.
சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்ட இளம் பருவகாலத்திற்கான தேசியக் கல்விக்கழகத்தின் வழிகாட்டு சிறப்பாய்வாளர் முனைவர் சுகுணா விஜயதேவர், வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல் குறித்த கல்வித் தத்துவம், கையாளவேண்டிய காரணம் போன்றவற்றைத் தமிழாசிரியர்களுடன் பகிர்ந்தார்.
பையப் பயிலும் பிள்ளைகள், சராசரி நிலையிலுள்ள பிள்ளைகள், மீத்திறன் பிள்ளைகள் என மூவகைப் பிரிவுகளாக பாலர்களின் பின்புலத்தின் அடிப்படையில் அவர வருக்கு ஏற்றவாறு பாடத்திட்டத்தை அமைப்பது குறித்து ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் பயிலரங்கில் இடம்பெற்றன.
அர்த்தமுள்ள விளையாட்டுகள், கற்றல் நிலையங்கள், வெளிப்புற நடவடிக்கைகள், பாத்திரமேற்று நடித்தல் நடவடிக்கை, எழுத்துகளை அடையாளங்காணும் நடவடிக்கை, பொருளைக் காட்டிப் பேசுதல் என பலதரப்பட்ட கற்பித்தல் உத்திகளை எடுத்துக்காட்டுகளுடன் பகிர்ந்தனர் பேச்சாளர்கள். ஒவ்வொரு நடவடிக்கையையும் வெவ்வேறு தர நிலைகளில் உள்ள பிள்ளைகளுக்கு ஏதுவாக எவ்வாறு அமைக்கலாம் என்பதையும் அவர்கள் சுட்டினர்.
இடையிடையே, பங்கேற்பாளர்கள் 'ஸூம்' மெய்நிகர் தளத்தின் தனி அறைகளில் குழுக்களாக கலந்துரையாடி கொடுக்கப்பட்ட பாடத்திட்ட நடவடிக்கை உரு வாக்கத்தில் ஈடுபட்டனர்.
பாட இறுதியில் இடம்பெறும் மதிப்பீட்டு நடவடிக்கையைப் பிள்ளைகளின் கற்றல் திறனுக்கும் விருப்பத்திற்கும் கற்றல் பாணிக்கும் ஏற்றவாறு வேறுபடுத்துவது குறித்தும் பகிரப்பட்டது.
"பிள்ளைகளின் வெளிப்பாடு மூலம் அவர்களை மதிப்பிடுகிறோம். இந்த மதிப்பீடு அவர்களை அடுத்த நிலைக்கு இட்டுச்செல்ல பெரும் உதவியாக இருக்கும். மேலும் கற்பித்தலை மதிப்பிடவும் பிள்ளைகளின் வெளிப்பாடு வகை செய்யும்," என்று விளக்கினார் திருவாட்டி கௌரி சத்தியமூர்த்தி.
பாலர் பள்ளி தமிழாசிரியர்கள் பணி மேம்பாடும் நிபுணத்துவ மேம்பாடும் பெறுவதற்கு உதவும் வகையிலும் மாறுபட்ட கற்பித்தல் முறையில் ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெறவும் நெறிப்படுத்தக்கூடியப் பயிற்சியாகவும் முறையான வழிகாட்டுதலாகவும் இந்தப் பயிலரங்கு விளங்கியதாகக் கூறினார் கல்வி அமைச்சின் பாடக்கலைத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவு 1, தாய்மொழிகள் துறையின் தமிழ்மொழிப் பகுதியின் மூத்த சிறப்பாய்வாளர் திருவாட்டி உஷாராணி சுப்ரமணியம்.
வேறுபடுத்தப்பட்ட கற்பித்தலில் இன்னும் ஏராள அம்சங்கள் உள்ளன என்றும் ஓரளவுதான் இந்தப் பயிலரங்கில் பகிர முடிந்தது என்றும் தகவல்களைத் திரட்டி மேலும் இதுபோன்ற பயிலரங்கில் பகிரக்கூடிய வாய்ப்புகள் உள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
பயிலரங்கில் கலந்துகொண்ட பாலர் பள்ளித் தமிழாசிரியர்கள் பல அம்சங்களைக் கற்றுகொண்டதில் பெருமிதம் அடைந்தனர்.
"பயிலரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பிள்ளைகளின் கற்றல் தேவைக்கேற்ப திட்டமிடவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. குறிப்புகள் நிறைய எடுத்துக்கொண்டேன். இன்னும் எவ்வாறு சிறப்பாகக் கற்பிக்கலாம் என்பதைச் சிந்திக்கப்போகிறேன்," என்றார் ராமகிருஷ்ணா மிஷன் சாரதா பாலர்பள்ளியின் தமிழாசிரியை ரமா எனும் திருவாட்டி ராமதிலகம் சுப்ரமணியம்.
"படைப்பாளர்கள் சிறந்த முறை யில் செய்தனர். எனது தலைமை ஆசிரியரின் ஊக்கமும் ஒத்துழைப்பும் இதுபோன்ற பயிலரங்கில் கற்றுக்கொண்டு மாற்றங்களை ஏற்படுத்த வகைசெய்கின்றன,"என்றார் அவர்.
"மாறுபட்ட திறன்களை, வேறுபட்ட பின்புலன்களைக் கொண்ட பிள்ளைகள் இருப்பதால் தேவைகளை அறிந்து பாடத்திட்டத்தை வரையும் உத்திமுறைகளையும் அவசியத்தையும் புரிந்துகொண்டேன். கலந்துரையாடலில் ஈடுபட்டு சிந்தனைகளைப் பகிர்ந்தது மிகவும் சிறப்பாக இருந்தது," என்றார் மூன்றாண்டுகளாக கல்வி அமைச்சு பாலர் பள்ளி @ தெம்பனிசில் தமிழாசிரியையாகப் பணியாற்றும் சிந்தியா மரியாள்.
அதற்கு முன்னர் 14 ஆண்டுகளாக பாலர் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய தனக்குப் பயிலரங்கு மிகவும் பயனளிக்கக்கூடியதாக இருந்தது என்றார் அவர்.