கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்கும் பொருட்டு புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. சன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைக்குமாறு அலுவலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குளிரூட்டியைக் குறைப்பது அல்லது பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்றும் கூறப்பட்டது.
சுகாதார அமைச்சு, தேசிய சுற்றுப்புற அமைப்பு, கட்டட கட்டுமான ஆணையம் ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்ட ஐந்து பக்க ஆவணத்தில் இந்த வழிகாட்டுதல்கள் இடம்பெற்றிருந்தன.
காற்றோட்டம் அதிகமில்லாத இடங்களில் கிருமிப் படலங்கள் கொவிட்-19 தொற்றைப் பரப்பலாம்.
அலுவலகக் கட்டடங்கள், கடைத்தொகுதிகள், சில்லறை வர்த்தகக் கடைகள், பல் மருந்தகங்கள், உணவங்காடிகள், தங்குவிடுதிகள் போன்ற பல்வேறு இடங்களில் கட்டட உரிமையாளர்களும் வளாக நிர்வாகத்தினரும் பின்பற்றக்கூடிய நடவடிக்கைகளை இந்த வழிகாட்டுதல்கள் அறிவுறுத்தியுள்ளன.
இந்நிலையில் கதவுகள் மூடித் திறப்பதால் பொதுப் பேருந்துகளிலும் ரயில்களிலும் காற்றோட்டம் அதிகம் உள்ளதாக சென்ற ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் 'ஏஸ்டார்' நிறுவனம் கண்டறிந்தது.
சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரமாக நடந்தால் கிருமிப் பரவலைத் தடுக்கலாம் என்று கூறப்பட்டது.

