புதுடெல்லி: மத்திய அரசின் புதிய மின்னியல் விதிகள், சமூக ஊடகப் பயனர்களின் தனிப்பட்ட சுதந்திர உரிமைக்கு எதிராக உள்ளதாகக் கூறி 'வாட்ஸ்அப்' நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
'ஃபேஸ்புக்', 'வாட்ஸ்அப்', 'டுவிட்டர்' மற்றும் 'யூடியூப்' ஆகிய சமூக ஊடகங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் எதிராகத் தகவல்கள் பகிரப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து ஓ.டி.டி. தளங்கள் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த பிப்ரவரியில் ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு வெளியிட்டது.
இதனை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு நேற்று முடிவடைந்த நிலையில், விதிமுறைகளைப் பின்பற்றாத சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய மின்னியல் கொள்கைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
"தகவலை முதலில் வெளியிடுபவர் குறித்த விவரங்களை வழங்கவேண்டும் என்று மத்திய அரசு கேட்கிறது. இது அரசியல் சாசனத்தின் தனி உரிமைக்கு எதிரானது," என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது. பகிரப்படும் தகவல்களின் தடம் அறியும் செயல், பயனர்களின் தரவுகளைத் தனியார் நிறுவனங்கள் திரட்ட வழிவகுக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
எனவே, இந்தியாவின் மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய மின்னியல் ஒழுங்குமுறை விதிகளுக்குத் தடைவிதிக்க உத்தரவிட வேண்டும் என்று 'வாட்ஸ்அப்' நிறுவனம் தனது மனுவில் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வழக்கு மத்திய அரசிற்கும் சமூக இணைய ஊடகங்களுக்கும் இடையேயான மோதலை வெளிப்படுத்துவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கோப்புப்படம்

