கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோதும் தங்கள் பணியாளர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும்படி ஒரு சில நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
வீட்டில் இருந்து வேலை செய்வதில் முதலாளிகளின் நம்பிக்கை இல்லாமை, பணியிடத்தில் அதிக உற்பத்தித்திறன் கொண்டவர்களாக இருப்பதாக முதலாளிகள் நம்புவது, நிறுவனக் கொள்கையில் நீக்குப்போக்குத்தன்மை குறைவு ஆகியவையே அதற்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
சமூகத்தில் கொவிட்-19 தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, குறிப்பிட்ட கருவியின் சேவை தேவைப்படும் ஊழியர்கள் மட்டுமே பணியிடங்களில் இருந்தவாறு வேலை செய்யலாம். ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை இயல்புநிலையாக நிறுவனங்கள் கருத வேண்டும்.
அண்மையில், பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை உறுதிசெய்யாத 11 நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சு தலா ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

