மலேசியாவில் வசிக்கும் தங்களின் அன்புக்குரியவர்களைக் காண முடியாமல் சிங்கப்பூரர்களுக்கும் இங்குள்ள மலேசியர்களுக்கும் கடந்த ஆண்டு கடும் சிரமத்துடனேயே கழிந்தது.
அடிக்கடி ஜோகூர் கடற்பாலத்தைக் கடந்து சென்று, உறவினர்களைக் கண்டு வந்தது வழக்கமாக இருந்த நிலையில், இப்போதைய கடும் கட்டுப்பாடுகள் அவர்களுக்கு வேதனையளிப்பதாக உள்ளது. ஆயினும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, அன்புக்குரியவர்களுடன் மீண்டும் ஒன்றிணைந்து அளவளாவும் நாள் விரைவில் திரும்பும் என அவர்கள் நம்பிக்கையுடன் காத்து இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு இரு நாடுகளையும் கொவிட்-19 தொற்று தாக்கியதில் இருந்து, மலேசியாவில் மும்முறை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது. வேலை தொடர்பான காரணங்கள் தவிர்த்து அங்கு 13 மாநிலங்களுக்கு இடையே இப்போதைக்குப் பயணம் செய்ய முடியாது.
இதனிடையே, கடந்த ஆண்டு இரு மாதகாலம் நடப்பில் இருந்த நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்தால் கொரோனா பரவலைப் பேரளவு கட்டுப்படுத்திய நிலையில், சிங்கப்பூரில் இம்மாதம் சமூகப் பரவல் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
அதிகாரபூர்வ காரணங்களுக்காகவும் அத்தியாவசிய தொழில்சார் பயணங்களுக்காகவும் சிங்கப்பூர்-மலேசியா இடையே அதிகமானோர் சென்று வர அனுமதிக்கும் வகையில், இரு சிறப்புப் பயண ஏற்பாட்டுத் திட்டங்கள் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நடப்புக்கு வந்தன. இருப்பினும், உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்புப் பயண ஏற்பாட்டுத் திட்டம் இவ்வாண்டு பிப்ரவரி 1 முதல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இம்மாதம் 12ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை மலேசியாவில் மூன்றாம் முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால் எல்லை திறக்கப்படுவது மேலும் தாமதமாகலாம். இந்தச் செய்தி, இங்குள்ள ஒரு யோகா நிலையத்தில் விற்பனை ஆலோசகராகப் பணிபுரியும் 35 வயதான திருவாட்டி ஈஸ் குகதாசனுக்கு ஏமாற்றமளிப்பதாக அமைந்துள்ளது.
இவரைப் போலவே ஏராளமான மலேசியர்கள் கடந்த ஆண்டு நோய்ப் பரவல் தொடங்கியதில் இருந்து தங்களின் அன்புக்குரியவர்களைக் காண ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
திருவாட்டி ஈஸின் 69 வயது பெண் உறவினர் இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இம்மாதம் இறந்துவிட்டார்.
இதையடுத்து, சிரம்பானில் வசிக்கும் தம் 69 வயது தாயாரின் பாதுகாப்பு குறித்து மனக்கலக்கத்துடன் இருக்கிறார் திருவாட்டி ஈஸ். இவரின் தாயார் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
"மலேசியாவில் கொரோனா பரவல் மோசமடைந்து வரும் நிலையில், என் தாயாரின் நிலை குறித்து எனக்குக் கவலையாக இருக்கிறது," என்றார் திருவாட்டி ஈஸ்.
அதனால், வேலையை விட்டுவிட்டு, ஊர் திரும்பிவிடலாமா என்று சில நேரங்களில் இவருக்கு எண்ணம் எழுவதுண்டு.
ஆயினும், குடும்பத்தில் தாம் ஒருவரே வருமானம் ஈட்டுவதால் தாயாரைக் காண்பதற்காக ஊர் திரும்புவது நிதி நிலைமையைச் சிக்கலாக்கிவிடும் என திருவாட்டி ஈஸ் கருதுகிறார்.
அவசர காரணங்களுக்காகத் தங்களின் குடும்ப உறுப்பினர்களைக் காணும் விதமாக, இறப்பு, கடும் உடல்நலக் குறைபாடு அவசரகாலப் பயணத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூரர்கள் அல்லது மலேசியர்கள் இன்னொரு நாட்டிற்குச் செல்ல கடந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து அனுமதிக்கப்படுகின்றனர்.

