இஸ்லாமிய சமய ஆசிரியைகளுக்கு எதிராக பாலியல் வன்செயல்களை இடம்பெறச் செய்யும் கண்ணோட்டத்துடன், அவர்கள் எந்த அளவுக்குக் கவர்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை வரிசைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளும் ஓர் ஆய்வு, இங்குள்ள சமூக ஊடகத்தளங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சிங்கப்பூரின் இணைய நடத்தை விதிகளுக்கு முரணாக அந்த ஆய்வு இருப்பதாகவும் அதற்கு இங்கு இடமல்லை என்றும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் இன்று (மே 28) தெரிவித்தது.
MeWe என்ற சமூக ஊடகத்தில் இடம்பெற்று இருந்த அந்த ஆய்வு பற்றி முதன் முதலாக புதன்கிழமை தெரியவந்தது. அது பற்றி இப்போது புலன்விசாரணை நடக்கிறது. அதை அகற்றும்படி ஆணையம் அந்தத் தளத்திடம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, அந்த ஆய்வை கடுமையாகக் கண்டிப்பதாக தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார். இது பற்றி நேற்று கருத்து தெரிவித்திருந்த சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்), இந்த விவகாரம் பற்றிய புலன்விசாரணையை வேகப்படுத்தும்படி கேட்டு போலிசிடம் புகார் செய்திருப்பதாகக் கூறியது.