கொவிட்-19 கட்டுப்பாடு: பணிப்பெண்களுக்கு ஓய்வுநாளிலும் சம்பளமின்றி கூடுதல் வேலை

கொவிட்-19 கட்டுப்பாடு: பணிப்பெண்களுக்கு ஓய்வுநாளிலும் சம்பளமின்றி கூடுதல் வேலை

1 mins read
ac90286c-6194-49aa-a0bd-ad124d589b77
-

கொவிட்-19 கிருமிக்கு எதிரான புதிய கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்த பின், இங்குள்ள இல்லப் பணிப்பெண்கள் சிலர் ஓய்வு நாட்களில் சம்பளமில்லாமல் வீட்டில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப் படுகின்றனர்.

வரும் ஜூன் 13ஆம் தேதி வரையிலான இரண்டாம் கட்ட நடவடிக்கைகளின்போது, ஓய்வு நாட்களில் வீட்டில் இருக்கும்படி இல்லப் பணிப்பெண்களுக்கு மனிதவள அமைச்சு கடந்த வாரம் அறிவுறுத்தியது. கிருமிப் பரவலைத் தவிர்ப்பதே அதன் நோக்கம்.

ஓய்வு நாளில் பணியாளர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு வேலை எதையும் தரக்கூடாது. அல்லது அவர்கள் ஓய்வுநாளை விட்டுக்கொடுத்து வீட்டில் வேலை செய்தால், அதற்குரிய சம்பளத்தை முதலாளிகள் வழங்கவேண்டும் என்றது அமைச்சு.

புதிய கட்டுப்பாடுகளால் ஓய்வு நாளில் தன் முதலாளி தன்னை வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொண்டதாகக் கூறிய இந்தோனேசியப் பணிப்பெண் திருவாட்டி லுலுக், முதலாளி தனக்கு கூடுதல் வேலைகள் சொன்னதாகச் கூறினார். அதற்குரிய ஊதியம் அவருக்கு வழங்கப்படவில்லை.

அவரைப் போலவே பல பணிப்பெண்கள், நீண்ட நேரத்துக்கு வேலை செய்யும் கட்டாயம் ஏற்படுவதாகவும் அதற்கான ஊதியம் கிடைப்பதில்லை எனவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினர். அத்துடன் வீட்டில் தான் அவர்கள் வேலை என்பதால் போதிய ஓய்வு கிடைப்பதில்லை என்று சிலர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்