எம்ஆர்டி ரயிலில் தன் காலில் மிதித்த சிறுமியை அறைந்ததன் தொடர்பில் வேண்டும் என்றே காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை மாது ஒருவர் ஒப்புக்கொண்டார்.
சம்பவம் நடந்தபோது சிறுமிக்கு வயது எட்டு. பாதிக்கப்பட்ட சிறுமி 14 வயதுக்கு உட்பட்டவர் என்பதால், கோனி சோ எனும் அந்த மாது கூடுதல் தண்டனையை எதிர்நோக்குகிறார்.
கடந்தாண்டு ஜூலை 15ஆம் தேதி, சுவா சூ காங் ரயில் நிலையத்தில் பிற்பகல் 1.47 மண அளவில் தன் தாயாருடன் ரயிலில் ஏறிய சிறுமி, சோவின் காலில் தவறுதலாக மிதித்துவிட்டார். அதற்காக சோவிடம் சிறுமி மன்னிப்புக் கேட்டார். ஆனால் தொலைபேசியில் சத்தமாகப் பேசிக்காண்டிருந்த சோவுக்கு சிறுமியின் மன்னிப்பு கேட்கவில்லை.
பின்னர் சிறுமி மன்னிப்புக் கோரவில்லை என்று அவருடைய தாயாருடன் சோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறுமி மன்னிப்பு கேட்டுவிட்டதாக அவர் தாயார் கூறினார்.
ரயில் இயூ டீ நிலையத்தை அடைந்ததும் சிறுமியும் அவர் தாயாரும் இறங்க முற்பட்டபோது, சிறுமியை சோ அறைந்தார். சிறுமியை அவரது தாயார் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோது, அவரது கன்னத்தில் காயம் ஏற்பட்டிருந்தது. சோவுக்கு
குறைந்தது 5,000 வெள்ளி அபராதம் விதிக்கும்படி அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தை இன்று கேட்டுக்கொண்டார்.