சிங்கப்பூரில் கொவிட்-19 சமூகத் தொற்று அதிகமாகி இருப்பதால் ஜூன் 13 ஆம் தேதிவரை கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கின்றன.
இதனால் நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு மேலும் நிதி உதவிகள் கிடைக்க இருக்கின்றன. இந்த $800 மில்லியன் ஆதரவுத் திட்டம் பற்றி நிதி அமைச்சு நேற்று அறிவித்தது.
ஊழியர்களைத் தொடர்ந்து வேலையில் வைத்திருக்க ஏதுவாக முதலாளிகளுக்கு மேலும் சம்பள மானியம் வழங்குவது, தனிப்பட்டவர்களுக்கு ஒரு தடவையாக பண உதவி செய்வது, வாடகைக் கழிவு ஆகியவை அந்த ஆதரவு உதவித் திட்டத்தில் அடங்கும்.
வேலை ஆதரவுத் திட்டத்தின்படி கொடுக்கப்படும் சம்பள மானியம் நீட்டிக்கப்படுகிறது.
உணவு, பானத் துறை, மேடைக்கலைத் துறை மற்றும் கலைப் படிப்பு, விளையாட்டுத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மே 16ஆம் தேதி முதல் ஜூன் 13 வரை இந்த ஆதரவு 50% ஆகக் கூட்டப்படுகிறது.
கதவை மூட வேண்டிய தேவை இல்லாத இதர துறை நிறுவனங் களுக்கு இந்த ஆதரவு 30%க்கு அதிகமாக்கப்பட்டுள்ளது.
குறைந்த, நடுத்தர வருவாய் ஊழியர்கள், சுய வேலை பார்ப்போர் ஆகியோருக்கு ஒரு முறை வழங்கும் உதவியாக $500 முதல் $700 வரை பணம் கிடைக்கும். இதன் தொடர்பிலான விவரங்கள விரைவில் இடம்பெறும்.
வாடகைக் கழிவு $100 மில்லியனுக்கும் குறைந்த வருடாந்திர வருமானம் கொண்ட சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் லாபநோக்கற்ற அமைப்புகளுக்கும் கொடுக்கப்படும்.
இதன் தொடர்பான விவரங்கள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
இவற்றோடு, கல்விக் கடனைத் திருப்பி அடைப்பதற்குச் சலுகையும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கல்விக் கடன், அதற்கான வட்டி ஆகியவற்றை செப்டம்பர் 30 வரை மேலும் நான்கு மாதங்களுக்குச் செலுத்த வேண்டாம் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தச் சலுகை, அனைத்து தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள், பலதுறை தொழிற்கல்லூரிகள் ஆகியவற்றுக்கான பாடக் கட்டணக் கடன், கல்விக் கடன், வெளிநாட்டு மாணவர் செயல்திட்டக் கடன் ஆகியவற்றுக்குப் பொருந்தும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.

