சிங்கப்பூர் சமூகத்தில் கொவிட்-19 பரவலைத் தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் அதிகமாகியுள்ளன.
அதனால் சில்லறை விற்பனைக் கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், உணவகங்கள், திரையரங்குகள், துணைப்பாட நிலையங்கள், பாலர்பள்ளிகள், மருந்தகங்கள் ஆகியவற்றுக்குப் பாதிப்பு அதிகமாகி இருக்கிறது.
இந்தச் சூழலில் இவற்றுக்கு ஆகும் வாடகைச் செலவை ஓரளவுக்கு ஈடுசெய்யும் வகையில் மேலும் உதவிகள் கிடைக்கும்.
தகுதிபெறும் வர்த்தக இடங்களில் செயல்படும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் லாப நோக்கற்ற அமைப்புகளுக்கும் வாடகை நிவாரணம் கிடைக்கும்.
இத்தகைய நிறுவனங்கள், அமைப்புகளின் வருடாந்திர வருமானம் $100 மில்லியனுக்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த விவரங்களை நிதி அமைச்சு நேற்று அறிவித்தது.
கொவிட்-19 கடும் கட்டுப்பாடு கள் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை நிறுவனங்களும் ஊழியர்களும் சமாளிக்க உதவும் வகையில் $800 மில்லியன் ஆதரவுச் செயல்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் அறிவித்த அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வாடகை நிவாரணம் கிடைக்கும்.
அரசாங்கத்துக்குச் சொந்தமான கட்டடங்களில் தொழில் நடத்தும் குத்தகைதாரர்களுக்கு ஒரு மாத வாடகைக் கழிவு உண்டு. இப்படி கிடைக்கும் கழிவுக்குத் தகுதி பெறும் உள் குத்தகைதாரர்கள் யாராவது இருந்தால் அவர்கள் பயன் அடையும்படி குத்தகைதாரர்கள் உதவ வேண்டி இருக்கும் என்று அமைச்சு தெரிவித்தது.
தனியாருக்குச் சொந்தமான வர்த்தகக் கட்டடங்களில் தொழில் நடத்துவோருக்கு, ஒரு புதிய வாடகை ஆதரவுத் தட்டத்தின் கீழ், பாதி மாத வாடகைக் கழிவை சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் நேரடியாக குத்தகைதாரர்களுக்குக் கொடுக்கும் என்று அமைச்சர் கூறினார்.
தங்கள் கட்டடங்களில் வாடகைக்குத்தொழில் நடத்துவோருக்கு மீதி மாத வாடகைக் கழிவைக் கொடுத்து உதவும்படி கட்டட உரிமையாளர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந்தப் பட்டுவாடா ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து கிடைக்கும்.
மே 14 ஆம் தேதிக்கும் மே 29 ஆம் தேதிக்கும் இடையில் ஒப்பந்தப்படியான ஆகப்புதிய மொத்த வாடகை அடிப்படையில் இது கணக்கிடப்படும்.
இது ஒருபுறம் இருக்க, சொந்த கட்டடத்தில் சிறிய, நடுத்தர நிறுவனமாக அல்லது லாபநோக்கற்ற அமைப்பாகச் செயல்படுவோருக்கும் ரொக்க உதவி உண்டு. இது அவர்கள் சொத்தின் இந்த ஆண்டு மதிப்பு அடிப்படையில் இருக்கும்.

