கொவிட்-19 தொற்று இங்கு ஒரு தொற்றுநோயாகத் தொடரக்கூடிய வாய்ப்பு இருப்பதைக் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப சிங்கப்பூர் திட்டமிடத் தொடங்கி இருக்கிறது என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
அதாவது, சிங்கப்பூரர்கள் அப்போதைக்கு அப்போது நோய்த்தடுப்பு ஆற்றலை அதிகரித்துக் கொள்ள வேண்டி இருக்கும். பயம் குறையும் வகையில் அந்த நோய்க்கு வரும் மாதங்களில் இன்னும் சிறந்த சிகிச்சை கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது என்று நேற்று மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்தார்.
அப்போதும்கூட அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிங்கப்பூர் எடுக்க வேண்டிய தேவை இருக்கும் என்று கூறிய திரு வோங், கிருமி தொற்றுவதைக் குறைக்கும் வகையில் கட்டடங்களில் காற்றோட்ட வசதிகளை எடுத்துக் காட்டாகக் குறிப்பிட்டார்.
கொவிட்-19 கிருமித்தொற்றை, இங்கு நிலை பெற்றுவிட்ட ஒரு தொற்றுநோயாக எப்போது கருது வது என்று கேட்டதற்கு அதை தன்னால் சொல்ல இயலவில்லை என்று அமைச்சர் கூறினார்.
இருந்தாலும் உலகம் முழுவதையும சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்து வருவதை கவனத்தில் கொண்டு சிங்கப்பூர் பலவற்றுக்கும் திட்டமிட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமியை அறவே துடைத்து ஒழிப்பது சாத்தியமானதல்ல. அந்தக் கிருமி ஒருபோதும் ஒழியாது. அதோடு வாழ நாம் கற்றுக்கொள்ளவேண்டி இருக்கும் என்ற முடிவை உலக வல்லுநர்கள் நெருங்குகிறார்கள் என்றாரவர்.

