சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 30 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 15 பேர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர்கள்.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் யாருக்கும் புதிதாக தொற்று இல்லை. சமூகத்தொற்று ஏற்பட்டவர்களில் 15 பேர் கொவிட்-19 நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
அவர்களில் எட்டுப் பேர் தனித்து வைக்கப்பட்டு இருந்தவர்கள்.
நால்வருக்குத் தொடர்பில்லா தொற்று ஏற்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து வந்த 15 பேருக்குத் தொற்று இருந்தது தெரியவந்ததை அடுத்து அவர்கள் அனைவருக்கும் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இங்கு வந்தவர்களில் எட்டுப் பேர் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
சுகாதார அமைச்சு வியாழக்கிழமையன்று 14 பேருக்குச் சமூகத்தொற்று ஏற்பட்டதாக தெரிவித்தது. அவர்களில் நான்கு துப்புரவு ஊழியர்களும் GovTech என்ற அமைப்பைச் சேர்ந்த ஊழியரான மாது ஒருவரும் அடங்குவர்.
தொடர்ப்பு இல்லாத தொற்று ஏற்பட்டு இருந்த மூவரில் இவர் ஒருவர். மற்றொருவர் 67 வயது ஆடவர். மூன்றாமவர் 42 வயது பங்ளாதேஷ் ஊழியர்.
இதனிடையே, நேப்பாளத்தில் இருந்து ஏப்ரல் 25 ஆம் தேதி சிங்கப்பூர் வந்த தனக்கு சாங்கி விமான நிலையத்தில் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று திருவாட்டி சோனால் வாடே, 32, என்ற கொவிட்-19 நோயாளி கூறியதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்பது புலன்விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

