லாரியிலிருந்து திருடிய குற்றத்துக்காக போலிஸ் காவலில் இருந்த நபர், மலம் கழித்து அதனை போலிஸ் துணை அதிகாரி மீது வீசினார். பொதுத் துறை அதிகாரி மீது வன்முறையைப் பயன்படுத்தியது உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகளை சுலைமான் அப்துல் மஜித் மரைக்கார், 34, நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
திருட்டுக் குற்றங்களுக்காக சிறைக்கு பல முறை சென்ற சுலைமான், கடந்தாண்டு அக்டோபரில் லாரி ஒன்றில் புகுந்து கைப்பேசிகள் உள்ளிட்ட பொருட்களை திருடியதால் பிடிபட்டார். உட்லண்ட்ஸ் போலிஸ் வட்டார தலைமையகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த சுலைமான் தண்ணீர் குடிப்பதற்காக தாளால் செய்த குவளை தரப்பட்டது.
சுலைமான் அதில் மலம் கழித்து, 24 வயது போலிஸ் துணை அதிகாரி மீது வீசினார். அதிகாரி மேல் அதிகாரியிடம் அதைப் பற்றி புகார் அளித்தார்.

