கொவிட்-19 தொற்று காலத்தில் உணர்புவூர்வமாகவும் மன ரீதியிலும் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன.
'பெரியோர் பாதுகாப்புச் சேவை' என்ற அமைப்பு சென்ற ஆண்டில் புலன்விசாரணை நடத்திய இத்தகைய சம்பவங்கள் எண்ணிக்கை 78% அதிகமாகி உள்ளது.
இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை 2019ல் 37 ஆக இருந்தது. அது சென்ற ஆண்டில் 66 ஆகக் கூடியது என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கொவிட்-19 காரணமாக பொருளியல் நிச்சயமில்லாத நிலை ஏற்பட்டு, அதன் காரணமாக இத்தகைய சம்பவங்கள் அதிகமாகி இருக்கலாம் என்று இந்த அமைச்சின் பேச்சாளர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
சிலருக்கு வேலை போய் வருவாய் குறைந்து இருக்கலாம். இதனால் குடும்பங்களில் பிரச்சினை ஏற்பட்டு இருக்கும். குறிப்பாக குடும்பங்களில் மற்றவர்களைச் சார்ந்து வாழ்பவர்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.
குடும்பங்களில் அதிகமாகியுள்ள இத்தகைய உளைச்சல்கள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லாத போது குடும்பத்தில் யாராவது தவறாக நடத்தப்படக்கூடிய வாய்ப்பு ஏற்படலாம் என்று அவர் விளக்கினார்.
பெரியோர் பாதுகாப்புச் சேவை அமைப்புக்கு வந்த விசாரணை அழைப்புகளும் சென்ற ஆண்டில் அதிகமாயின. 2019ல் இவற்றின் எண்ணிக்கை 607 ஆக இருந்தது. சென்ற ஆண்டில் 1,196 ஆகக் கூடியது. விசாரணைக்கு வந்தவை அதிகம் என்றாலும் இந்த அமைப்பு தலையிட்ட சம்பவங்கள் சென்ற ஆண்டில் குறைந்தன. இந்த எண்ணிக்கை 2020ல் 166 ஆக இருந்தது. 2019ல் இது 221 ஆகும்.
குடும்ப வன்செயல் பற்றிய புரிந்துணர்வு பொதுமக்களிடம் மேம்பட்டுள்ளது. யாரை தொடர்பு கொள்ளவேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரிந்து இருக்கிறது என்று பேச்சாளர் கூறினார்.
குறிப்பாக பொருளியல் முடக்கக் காலத்தின்போது இந்த அமைச்சும் அதன் பங்காளிகளும் மக்களை எட்டக்கூடிய தங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியதாகவும் அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

