கொவிட்-19 பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து இங்கு திரும்பும் சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் தங்களுக்குத் தொற்று இல்லை என்பதைக் காட்டும் பரிசோதனை முடிவுகளுடன் வரவேண்டும் என்ற புதிய விதி நேற்று முதல் நடப்புக்கு வந்துள்ளது.
இந்தப் புதிய விதி, விமான நிலைய முன்களப் பணியாளர்களைக் கிருமித்தொற்றில் இருந்து பாதுகாக்க உதவும்.
அதனால் சிங்கப்பூரின் சுகாதார மராமரிப்புத் துறையின் சுமை கொஞ்சம் குறையும் என்று தொற்றுநோய்த் துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இருந்தாலும் அந்த விதியை அமலாக்குவதில் வரம்புகள் இருப்பதாகவும் நினைப்பதைப் போல் அது அவ்வளவு எளிதானதல்ல என்றும் அவர்கள் கூறினர்.
சிங்கப்பூருக்குத் திரும்பும் குடிமக்கள், நிரந்தரவாசிகள் அனைவரும் தாங்கள் இங்குவர புறப்படுவதற்கு முன்னதாக 72 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டு இருக்க வேண்டும். கிருமித்தொற்று இல்லை என்பதை அநதப் பரிசோதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சு அண்மையில் தெரிவித்தது.
ஆறு வயதும் அதற்குக் குறைந்த வயதும் உள்ள சிறார்களுக்கு விதி விலக்கு உண்டு.
இது பற்றி கருத்து தெரிவித்த ரோஃபி கிளினிக் என்ற மருந்தகத்தைச் சேர்ந்த டாக்டர் லிங் லி மின், சில நாடுகளில் போதிய பரிசோதனை வசதிகள் இல்லாததால் அங்குள்ள சிங்கப்பூரர்கள் நாடு திரும்புவது பாதிக்கப்படலாம் என்று தெரிவித்தார்.
இந்த புதிய ஏற்பாடு சாங்கி விமான நிலைய ஊழியர்களைப் பாதுகாக்கும் என்று தெரிவித்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருந்தகத் துறை ஆய்வுத் திட்ட துணை இயக்குநர் பேராசியர் தம்பையா, இந்தப் பரிசோதனையை எல்லாருக்கும் கட்டாயமானதாக்கினால் அது செம்மையானதாக, சரியானதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
இந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சோ சுவீ ஹோக் பொது சுகாதாரத் துறை தலைவர் பேராசிரியர் டியோ யிக் யிங், இந்தப் புதிய விதி, எதிர்பார்க்கப்பட்டதைவிட சவால்மிக்கதாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்.