கொவிட்-19 கிருமிப் பரவலை கண்டறியவும் அது பரவுவதை மட்டுப்படுத்தவும் மே மாதம் 40 பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் சராசரியாக 55,000 பிசிஆர் பரிசோதனைகள் அன்றாடம் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பான அமைச்சுகள்நிலை பணிக்குழுவுக்கு இணைத் தலைவருமான திரு ஓங் நேற்று மெய்நிகர் செய்தியாளர் மாநாட்டி பேசினார்.
அதில் பேசிய திரு ஓங், இனி பரிசோதனைகள் பரந்த அளவிலானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
நேற்றைய அமைச்சுகள்நிலை குழுவின் செய்தியாளர் மாநாட்டுக்கு முன் பிரதமர் லீ சியன் லூங் ஆற்றிய தேசிய உரையில் தெரிவித்த 'வேகமான எளிய முறையிலான பரிசோதனை' முறை குறித்து திரு ஓங் விவரித்தார்.
"விரிவான பரிசோதனைகள் பெரிய அளவிலான நிகழ்ச்சிகள், ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்ய நம்பிக்கை தரும். எனவே, பரந்த அளவிலான, வேகமான எளிய முறையிலான பரிசோதனைகள் இனி புதிய வழக்கநிலையாக மாறும் என எதிர்பார்க்கலாம்," என்று திரு ஓங் விளக்கமளித்தார்.

