லிம் சூ காங்கில் ஐந்து நண்பர்கள் ஒருவரை ஒருவர் போட்டி போட்டு வாகனமோட்டியதற்கு சிறை, அபராதம், வாகனமோட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு டிசம்பரில் ஐவரும் பந்தயத்தில் ஈடுபட்டனர்.
ஜாலான் பஹாரை நோக்கிச் செல்லும் லிம் சூ காங் சாலையில் ஐயன் கோ டேபாவ், 32, பந்தயத்தில் ஈடுபட்ட குற்றத்தையும் அபாயகரமாக வாகனம் ஒட்டியதையும் ஒப்புக்கொண்டார். அவரது நண்பர்கள் டேனியல் சுவா வெய் சுவான், 28, டேனியல் லீ ஜி, 28, ஹுபெர்ட் சூ, 27, சேமுவேல் லோ ஷி லி, 17 ஆகியோரும் பந்தயத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர்.
ஐவருக்கும் ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தலா 1,500 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு 18 மாதங்கள் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டது. அபாயகரமாக வாகனத்தை ஓட்டியதற்காக கோவுக்கு கூடுதலாக 2,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. கேமராவிலிருந்து தப்ப அவர்கள் கவனமாக பந்தயத்துக்கான இடத்தை தேர்வு செய்து இருவர் இருவராக போட்டிபோட்டனர்.
நீதிமன்றத்தில் பேசிய தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர் கெவின் ஹோ, கோவும் சுவாவும் முதலில் போட்டியில் இறங்கியதாக சொன்னார். கோ, பிஎம்டபிள்யூ காரையும் சுவா, ஹோண்டா சிவிக் காரையும் ஓட்டினர். சுவா மூன்று முறை ஒலிப்பானை எழுப்பியதும் இரு கார்களும் பறந்தன. சுவா, 115 கிலோ மீட்டர் வேகத்திலும் கோ, 110 கிலோ மீட்டர் வேகத்திலும் காரை ஓட்டினர். இதே போன்று இருவர் இருவராக மாறி மாறி பந்தயத்தில் ஈடுபட்டனர்.

