வேலை ஆதரவுத் திட்டம், வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் கடந்த மார்ச் மாதம் 2600 முதலாளி களுக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் 85 மில்லியன் வெள்ளி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அதனைத் தெரிவித்தது.
முதலாளிகள் ஒப்படைத்த தகவல்கள் உண்மையானவையா என்றும் சரியானவையா என்றும் உறுதிப் படுத்தப்பட்ட பின்னர், அத்தொகை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றது ஆணையம்.
வேலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் 52 மில்லியன் வெள்ளியும் வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 33 மில்லியன் வெள்ளியும் முதலாளி களுக்கு வழங்கப்படாமல் மார்ச் மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
உதவித் திட்டங்களுக்கு முதலாளிகள் தகுதிபெறுவதை உறுதிசெய்யும் கூடுதல் ஆவணவங்களைப் பெற வேண்டியிருந்ததே அதற்குக் காரணம்.
உதவித் தொகை நிறுத்திவைக்கப்பட்ட 2,600 முதலாளிகளும் வேலை ஆதரவுத் திட்டம், வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் ஆகியவற்றுக்குத் தகுதிபெறும் முதலாளிகளில் இரண்டு விழுக்காட்டினர் ஆவர்.
வேலை ஆதரவுத் திட்டம் 2020 பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது.
கொவிட்-19 சூழலில் முதலாளிகள் தங்கள் உள்ளூர் ஊழியர்களை தொடர்ந்து வேலையில் வைத்திருக்க உதவுவதே அத்திட்டத்தின் நோக்கமாகும். அதில் உள்ளூர் ஊழியர் ஒவ்வொருவருக்குமான ஊதியத்தில் முதல் 4,600 வெள்ளி தொகையில் ஒரு பங்கை அரசாங்கம் செலுத்துகிறது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட வேலை உருவாக் கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம், கூடுதல் உள்நாட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு உதவுகிறது.
வேலை வளர்ச்சித் திட்டத்தில் மோசடி குறித்து விசாரணை
வேலை வளர்ச்சித் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 சம்பவங்களை போலிசார் விசாரித்து வருவதாகவும் உள்நாட்டு வருவாய் ஆணையம் தெரிவித்தது. அந்த சம்பவங்களைப் பற்றி போலிசிடம் தகவல் தெரிவித்ததாக ஆணையம் கூறியது.
ஊழியர்களுக்குச் செலுத்தும் மத்திய சேம நிதித் தொகையைத் தவறாகக் குறிப்பிட்டு பின்னர் அதனைத் திருத்திக்கொண்ட முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை அதற்கு ஏற்ப வழங்கியதாக அது கூறியது.
வேறு சில முதலாளிகள், ஆணையத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்காததால் அவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றது ஆணையம்.
சிலர் போலியான ஊழியர் விவரங்களைத் தெரிவித்தனர் என்றும் வேறு சிலர் ஊதியத்தை கூட்டாமல் மசேமநிதி பங்களிப்புகளை அதிகமாகக் காட்டினர் என்றும் ஆணையம் கூறியது.