தி ஆன்லைன் சிட்டிசன் (டிஓசி) இணையப்பக்கத்திற்காக எழுதும் மலேசிய செய்தியாளர் தமக்கு அவதூறு விளைவித்ததாகக் கூறி அதற்கான இழப்பீடு கேட்டு பிரதமர் லீ சியன் லூங் வழக்குத் தொடுத்துள்ளார்.
பிரதமர் லீ தனது தந்தை திரு லீ குவான் இயூவுக்கு தவறான வழிகாட்டியதாக அந்த இணையப்பக்கத்தில் 'டிஓசி' எழுத்தாளரான ருபாஷினி சண்முகநாதன் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் பிரதமர் லீக்கு ஏற்படுத்திய அவதூறையும் அதற்கான இழப்பீட்டையும் நேற்று உயர்நீதிமன்றம் மதிப்பீடு செய்யவிருந்தது. ஆனால் ருபாஷினி சண்முகநாதன் நீதிமன்றத்துக்கு வரவில்லை. பிரதமர் லீ கோரும் இழப்பீடு தொகை பற்றி குறிப்பிடப் படவில்லை.
மெய்நிகர் தளமான 'ஸூம்' வழி நடந்த விசாரணையில் ருபாஷினிக்கு 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து நீதிமன்ற ஆவணங்கள் அவரது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கும் 'டிஓசி' மின்னஞ்சலுக்கும் அவருக்கு நேரடியாகவும் அனுப்பப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் லீயைப் பிரதிநிதிக்கும் தவிந்தர் சிங்கின் வழக்கறிஞர்கள் முதன்முதலாக 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி அந்த செய்தியை நீக்கி, மன்னிப்புக் கேட்டு பிரதமருக்கு இழப்பீடு வழங்குமாறு கடிதம் அனுப்பி ருபாஷினியை தொடர்புகொள்ள முயற்சி செய்தனர்.
அவரது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும், அவரது ஃபேஸ்புக், லிங்க்ட்இன் போன்றவற்றுக்கும் தனிப்பட்ட செய்தியாகவும் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தை ருபாஷினி புறக்கணித்து விட்டார் என்று பிரதமர் லீ மனுவில் தெரிவித்திருந்தார்.
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம், ஷா ஆலமில் உள்ள ருபாஷினியின் இல்லத்திற்கு மலேசிய சட்ட நிறுவனம் மூலம் அவருக்கு நீதிமன்ற அழைப்பாணை, இழப்பீடு கோரிக்கை விவரம், நீதிமன்ற உத்தரவு முதலியவை 2019ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவருக்கு 2020ஆம் ஆண்டில் இதர ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
ஆனால் இவ்வாண்டு ஜனவரி 22ஆம் தேதிக்குப் பின்னர் ருபாஷினியின் சகோதரர் என்று தன்னை குறிப்பிட்ட ஓர் ஆடவர், ருபாஷினி இந்த முகவரியில் இல்லை என்று கூறினார்.
அவரது இரு மின்னஞ்சல் முகவரிகளுக்கும் முந்தைய இல்ல முகவரிக்கும் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் ருபாஷினிக்கு அனுப்பிய கடிதத்தில் தனது இழப்பீட்டு கோரிக்கையை அவர், ஏற்கவோ, மறுக்கவோ இல்லை என்று பிரதமர் தமது பிரமாண வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். மேலும் வழக்கில் ருபாஷினி முன்னிலையாகததால் நேற்று பிரதமர் லீக்கு சாதமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
'பிரதமர் லீயின் மனைவி ஹோ சிங் குடும்ப உறவுகளைத் துண்டித்துக் கொள்வது தொடர்பான செய்தியை சம்பந்தமில்லாமல் பகிர்ந்துகொண்டார்' என்ற தலைப்பில் 2019ல் டிஓசியில் ருபாஷினி எழுதிய கட்டுரைக்காக பிரதமர் லீ வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கில் இழப்பீட்டுத் தொகையை மதிப்பீடு செய்வதற்காக நீதிபதி ஆட்ரி லிம் விசாரணை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைத்தார். இதே கட்டுரைக்காக 'டிஓசி' ஆசிரியர் டெர்ரி ஸு மீதும் திரு லீ தனியாக வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

