புக்கிட் தீமா விரைவுச்சாலையில் கண்மூடித்தனமாக சாலைத் தடங்கள் மாறிய வேன் ஓட்டுநரான ஸைன்லாய் மஷோட், அந்த வழியாக சென்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிள் ஒருவரை மோதிவிட்டு அவருக்குக் கடுமையான காயம் விளைவித்தார்.
காயமடைந்த அவருக்கு உதவ வாகனத்தை நிறுத்துவதற்குப் பதிலாக, சம்பவ இடத்தைவிட்டு வேனை ஸைன்லாய் ஓட்டிச்சென்றுவிட்டார். அவர் வாடகைக்கு எடுத்து ஓட்டிய அந்த வேனை போலிசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தியபோது, குற்றத்தை ஒப்புக்கொள்ள ஸைன்லாய் மறுத்துவிட்டார்.
விபத்தைக் காட்டும் காணொளிப் பதிவைக் காட்டி அதிகாரிகள் மிரட்டிய பிறகே குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார்.
45 வயது சிங்கப்பூரரான ஸைன்லாய், கவனக்குறைவுடன் செயல்பட்டு கடுமையான காயம் விளைவித்தது உள்ளிட்ட குற்றங்களை இன்று (ஜூன் 1) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு இரு வாரங்கள், ஒருநாள் சிறைத் தண்டனையும் $2,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், அவர் வாகனம் ஓட்ட ஈராண்டு தடையும் விதிக்கப்பட்டது.
2018 செப்டம்பர் 7ஆம் தேதி காலை 7.40 மணியளவில் தீவு விரைவுச்சாலையை நோக்கி புக்கிட் தீமா விரைவுச்சாலையில் வேனை ஒட்டிக்கொண்டிருந்த ஸைன்லாய், நடு தடத்தில் இருந்து வலது தடத்திற்குத் திடீரென மாறினார்.
இந்த விபத்தைக் காட்டும் காணொளிப் பதிவு நீதிமன்றத்தில் காட்டப்பட்டது. அதில், மோட்டார்சைக்கிளுடன் வேன் மோதியதைத் தொடர்ந்து, மோட்டார்சைக்கிளோட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்தைவிட்டு வேனை ஸைன்லாய் ஓட்டிச்செல்வதை அக்காணொளிப் பதிவு காட்டியது.
விபத்து நிகழ்ந்தபோது 24 வயதான அந்த மோட்டார்சைக்கிளோட்டிக்கு முழங்கையில் எலும்புமுறிவும் அவரது கைகள், கால்களில் சிராய்ப்புக் காயங்களும் ஏற்பட்டன. நான்கு நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அவருக்கு 50 நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.

