யீசூன் அவென்யூ 5 வழியாக நேற்று (மே 31) இரவு வாகனங்களில் சென்றுகொண்டிருந்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
சாலையின் நடுவே மாது ஒருவர் படுத்துக் கிடந்ததைக் கண்ட ஓட்டுநர்கள் வாகனங்களை நிறுத்தினர்.
சாலையில் முதலில் உட்கார்ந்திருந்த அந்த மாது, பின்னர் படுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
புளோக் 732 ஈசூன் ஸ்திரீட் 72ல் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே நேற்று இரவு 8.40 மணியளவில் வழக்கத்திற்கு மாறான இந்தக் காட்சியைத் தாம் கண்டதாக பொதுமக்களில் ஒருவர் ஸ்டாம்ப் இணையத்தளத்திடம் கூறினார்.
“சாலையின் நடுவே முதலில் அந்த மாது அமர்ந்திருந்தார். பின்னர், அங்கு அவர் படுத்துவிட்டார். அவர் எதுவும் பேசவில்லை.
“வேறொருவர் அந்த மாதை அணுகி அவருக்குப் பக்கத்தில் நின்றார். அப்போதும்கூட அந்த மாது சத்தம் போடவில்லை. அவர் அமைதியாக படுத்துக் கிடந்தார்.
“அந்த வழியாக சென்ற சில கார்கள் நின்றன. மற்ற சில கார்கள் தடம் மாறி சென்றுவிட்டன.
“பெண் ஒருவர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது ஆபத்தானது என்பதை உணர்ந்தேன். ஆனால், அந்த மாது மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் என நினைக்கிறேன். அவர் குடிபோதையில் இருந்ததாகத் தெரியவில்லை,” என்றார் இந்தச் சம்பவத்தை நேரில் கண்டவர்.