ஹவ்காங்கில் இரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளிலும் ஈசூனில் ஒரு புளோக்கிலும் நேற்று கட்டாய கொவிட்-19 பரிசோதனை தொடங்கியது.
ஹவ்காங் அவென்யூ 8ல் 501, 507, ஈசூன் ஸ்திரீட் 72ல் 745 ஆகிய மூன்று புளோக்குகளில் வசிப்போர் அனைவரும் கட்டாயமாக எச்சில்/சளி மாதிரிப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் அறிவித்தது.
ஈசூன் புளோக் 745 குடியிருப்பாளர்களுக்கு இடையே நடத்தப்பட்ட கண்காணிப்புச் சோதனைகளில், இரு வீடுகளைச் சேர்ந்த அறுவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், கழிவுநீர்ச் சோதனையில் கொவிட்-19 கிருமித் துணுக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த புளோக்வாசிகளுக்குக் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அறுவருக்கும் எப்படிக் கிருமி தொற்றியது என்பது ஆராயப்பட்டு வருகிறது.
இதனிடையே, ஹவ்காங் புளோக் 501 மற்றும் 507ல் சேகரிக்கப்பட்ட கழிவுநீரைச் சோதித்தபோது, அதிலும் கொவிட்-19 கிருமித் துணுக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்விரு இடங்களிலும் நேற்றுக் காலை 9 மணியில் இருந்து கட்டாய கொரோனா பரிசோதனை தொடங்கியது.
ஹவ்காங் புளோக் 507க்கு நேற்றுக் காலை 9 மணியளவில் சென்றிருந்தபோது, கொரோனா பரிசோதனை முழுவீச்சில் இடம்பெற்று வந்ததையும் தங்களைச் சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள குடியிருப்பாளர்கள் வரிசையில் நின்றிருந்ததையும் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.
அவர்களில் ஒருவரான திருவாட்டி கோ பெங் ஹப், 60, "நான் நன்றாக இருப்பதால் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், இந்த புளோக்கில் எவரையேனும் கிருமி தொற்றியிருக்குமோ என்றே கவலைப்படுகிறேன்," என்றார்.
தாம் எப்போதுமே கவனமாக இருப்பதாகவும் வெளியே செல்லும்போதும் அல்லது திரும்பிய பின்னரும் கைகளை நன்கு கழுவிவிடுவதாகவும் சொன்னார் மெக்டோனல்ட்ஸ் கிளையில் பணிபுரியும் திருவாட்டி கோ.
எச்சில்/சளி மாதிரி சேகரிப்புப் பணி ஐந்து நிமிடங்களில் முடிந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கும் சக அல்ஜுனிட் குழுத்தொகுதி எம்.பி. ஜெரல்ட் கியமும் நேற்றுக் காலை அக்குடியிருப்பிற்குச் சென்று, குடியிருப்பாளர்களிடம் உரையாடினர். ஹவ்காங் எம்.பி. டெனிஸ் டானும் அங்கு வந்து இருந்தார்.
ஈசூன் புளோக் 745ல் இன்றும் ஹவ்காங்கில் உள்ள இரு புளோக்வாசிகளுக்கு நாளையும் கொரோனா பரிசோதனை நிறைவுறும்.

