சாலை விபத்து ஒன்றில் 14 வயது மிதிவண்டி ஓட்டுநர் உயிரிழந்துவிட்டார். திங்கட்கிழமையன்று மரினா ஈஸ்ட் டிரைவ் பகுதியில் விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்திலேயே அந்த பதின்ம வயது சைக்கிளோட்டி இறந்துவிட்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார். பிற்பகல் 4.25 மணியளவில் விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
உயிர்ச்சேதம் விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டியதற்காக 37 வயது ஆடவர் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பில் விசாரணை தொடர்கிறது. ஃபேஸ்புக் தளத்தின் 'எஸ்ஜி ரோட் விஜிலாண்டே - எஸ்ஜிஆர்வி' பக்கத்தில் விபத்தைக் காட்டும் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. மலேசியாவில் பதிவான கனரக வாகனம் ஒன்றின் முன் இரண்டாக முறிந்த நிலையில் இறந்தவரின் மிதிவண்டி கிடந்தது.

