தொற்றுப் பரவலைத் தடுக்க இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்ட 26 'ஹுவா ஸாய்' கிளைகள்
வாட்டிய வாத்து இறைச்சியை விற்கும் 'ஹுவா ஸாய்' உணவுக் கடையில், சமையல் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதை அடுத்து நிறுவனத்தின் 26 கிளைகளும் 14 நாட்களுக்கு மூடப்பட்டன. இதையடுத்து உணவுப் பாதுகாப்பு குறித்து அக்கறை நிலவத் தொடங்கியுள்ளது.
அனைத்து கிளைகளையும் மூடிய நிலையில் அங்கு சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படலாம் என்றும் தொற்றுப் பரவலுக்கான சாத்தியத்தைத் தடுத்து நிறுத்தலாம் என்றும் சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தது.
முதன்முதலில் ஆங்கர்வேல் ரோடு புளோக் 308ல் அமைந்துள்ள 'என்டியுசி ஃபுட்ஃபேர்' உணவங்காடியில் இருந்த 'ஹுவா ஸாய்' கடை ஊழியருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.
பின்னர் அக்கடை தொடர்பில் மேலும் சிலருக்குத் தொற்று உறுதியான நிலையில் நேற்று மாலை நிலவரப்படி கிருமித்தொற்றுக் குழுமத்தில் ஒன்பது பேர் சேர்ந்துவிட்டனர்.
மூன்று 'ஹுவா ஸாய்' கிளைகளில் வேலை பார்க்கும் ஏழு ஊழியர்கள் கிருமிக் குழுமத்தில் அடங்குவர். எஞ்சிய இருவர் 'ஆங்கர்வேல் என்டியுசி ஃபுட்ஃபேர்' உணவங்காடியின் வேறு கடைகளில் வேலை பார்ப்பவர்கள் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே ஆங்கர்வேல் ரோடு காப்பிக் கடையிலும் 'ஹுவா ஸாய்' கிளைகளிலும் தொற்றுப் பரவல் சாத்தியம் உண்டு என்று சுகாதார அமைச்சு தமது அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழு 'ஹுவா ஸாய்' கிளை ஊழியர்களில் அறுவர் ஒரே வீட்டில் வசிப்பவர்கள். மலேசிய, வியட்னாமிய நாடுகளைச் சேர்ந்த அவர்கள் இரு வெவ்வேறு கிளைகளில் வேலை பார்ப்பவர்கள்.
எஞ்சிய அந்த ஒரு ஊழியர், ஆங்கர்வேல், சிராங்கூன் கிளைகளில் வேலை பார்ப்பவர் என்றும் ஆங்கர்வேல் உணவங்காடியைத் தாண்டியும் தொற்றைப் பரப்பி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இந்நிலையில் உட்கார்ந்து சாப்பிடுவது அனுமதிக்கப்படாத பட்சத்தில் உணவை வாங்கிக் கொண்டு செல்வதால் கிருமித்தொற்று ஏற்படும் சாத்தியம் குறைவே என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக்.
சமைத்த உணவு வழி தொற்று பரவும் அபாயமும் உண்டு என்று குறிப்பிட்ட அவர், நல்ல சுகாதாரமும் முகக் கவசம் அணியும் பழக்கமும் இருந்தால் தொற்று ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு என்றார்.
மாசு படிந்த உணவின் மேல்பரப்பாலும் உணவுப் பொட்டலங்களாலும் கொவிட்-19 தொற்று பரவும் சாத்தியம் மிகக் குறைவு என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு முன்னதாக அறிவுறுத்தி இருந்தது. இதற்கான ஆதாரமும் இதுவரை இல்லை என்றது அமைப்பு.
உணவு பானக் கடைகள் தொடர்பான கிருமித்தொற்றுக் குழுமங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதெனக் குறிப்பிட்ட பேராசிரியர் குக், இதன் தொடர்பில் பதற்றம் வேண்டாம் என்று எச்சரித்தார்.
"நம்மில் பலரும் வீட்டிலிருந்து வேலை செய்கிறோம். வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்களே தொற்றுக்கு ஆளாகும் அபாயத்தில் சிக்குகின்றனர்," என்று அவர் சுட்டினார்.

