சிங்கப்பூர் திரும்பும் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் கொவிட்-19 கிருமி தொற்றவில்லை என்பதற்கான பரிசோதனைச் சான்றிதழ் வைத்திருப்பதை விமான நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும் என சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.
சாங்கி விமான நிலையத்தைப் பயன்படுத்தும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இந்தப் புதிய விதிமுறை தெரிவிக்கப்பட்டு உள்ளதாக ஆணையத்தின் அதிகாரி மார்கரெட் டான் கூறினார். சேனல் நியூஸ் ஏஷியா எழுப்பிய கேள்வி
களுக்குப் பதிலளிக்கைவில் அவர் இவ்விவரங்களைத் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கான விமானத்தில் ஏற அனுமதிக்குமுன்னர் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் உள்ளிட்ட எல்லாப் பயணிகளும் பிசிஆர் பரிசோதனை முடிவைக் காட்டும் சான்றிதழ் வைத்திருக்கிறார்களா என்பதை விமான நிறுவனங்கள் சோதனை செய்ய வேண்டும் என்றார் அவர்.
அனைத்துலக அங்கீகாரம் பெற்ற அல்லது சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ள சோதனைக்கூடம், மருந்தகம் அல்லது மருத்துவமனைகளில் அந்தச் சான்றிதழைப் பெற்றிருப்பது அவசியம்.
"பிசிஆர் பரிசோதனை முடிவு சான்றிதழ் வைத்திராதவரையும் கிருமி தொற்றியதாகத் தெரிவிக்கும் சான்றிதழ் வைத்திருப்போரையும் சிங்கப்பூர் விமானத்தில் ஏற அவை அனுமதிக்கக்கூடாது.
இதுபோன்ற காரணங்களால், இங்கு வந்த பின்னர்கூட அத்தகையோர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
"புறப்பட்ட இடத்திற்கே அவர்
களைத் திருப்பி அனுப்ப வேண்டியது விமான நிறுவனங்களின் பொறுப்பு," என்றார் திருவாட்டி டான்.
சுகாதார அமைச்சு கடந்த வாரம் வெளியிட்ட ஓர் அறிவிப்பைத் தொடர்ந்து சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் நடவடிக்கை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்னதாக கொவிட்-19 பிசிஆர் பரிசோதனை செய்து கிருமிதொற்ற வில்லை என்பதற்கான சான்றிதழை சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்பது அந்த அறிவிப்பு.
இருப்பினும் பயணத்திற்கு 21 நாட்கள் முன்னதாக கிருமித்தொற்று அபாயம் குறைவாக உள்ள ஆஸ்திரேலியா, புருணை, சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், மக்காவ் போன்றவற்றில் தங்கி இருந்தோருக்கு இந்தப் புதிய விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளனர்.

