ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகள் பற்றி இங்குள்ள முஸ்லிம் சமூகத்துக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் இஸ்லாமியத் தலைவர்கள் தவறு இழைப்பவர்கள் மீது வலுவான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சிங்கப்பூர் முஃப்தி கூறியுள்ளார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 780க்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தலைவர்களுடன் இணையம் வழியாக நடந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் டாக்டர் நசிருதீன் முகமது நசிர் பேசினார்.
சிங்கப்பூரின் ஆக உயரிய இஸ்லாமியத் தலைவரான டாக்டர் நசிருதீன் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை எது என்பதில் இஸ்லாமியத் தலைவர்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்றார்.
"பெண்களுக்கு தீங்கிழைப்பதை நகைச்சுவை என்று கூறும்போது அல்லது பாதிக்கப்பட்டவர்கள் மீது பழி சுமத்தப்பட்டு தவறு செய்தவர்கள் தப்பித்துக்கொள்ளும்போது, நாம் நிலைப்பாடு இன்றி இருக்கக்கூடாது," என்று டாக்டர் நசிருதீன் கூறினார். பெண் இஸ்லாமியத் தலைவர்களை தரவரிசைப்படுத்தி, அவர்களுக்கு பாலியல் ரீதியில் ஆபத்து ஏற்படுத்தும் இணையக் கணக்கெடுப்பு பற்றி கடந்த வாரம் தெரிய வந்தது. மீவீ எனும் சமூக ஊடகத்தில் இருந்த அந்த கணக்கெடுப்பு அகற்றப்பட்டு விட்டது.

