மின்தூக்கியில் தமது தனிநபர் நடமாட்டச் சாதனத்துடன் (பிஎம்டி) சென்ற 20 வயது ஆடவர் ஒருவர், அதில் ஏற்பட்ட தீயால் உயிரிழந்துவிட்டார். உட்லண்ட்ஸ் டிரைவ் 16 புளோக் 537ல் அமைந்துள்ள மின்தூக்கியில் நேற்று முன்தினம் இரவு தீச்சம்பவம் ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பதிவில் நேற்று தெரிவித்தது.
இரவு 11.25 மணிக்குத் தகவல் கிடைத்து அதிகாரிகள் வருவதற்குள் அக்கம்பக்கத்தினர் வாளிகளில் தண்ணீர் கொண்டு தீயை அணைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
கடுமையான தீக்காயங்களுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆடவர், பின்பு இறந்துவிட்டதை போலிஸ் பேச்சாளர் நேற்று உறுதிப்படுத்தினார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்துவருகிறது என்றும் இதில் சூது ஏதும் இருப்பதாக சந்தேகிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. தீச்சம்பவம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோக்கில் இருந்த சுமார் 90 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
'பிஎம்டி' தொடர்பான மின்சார அம்சமே நெருப்பு ஏற்படக் காரணமாக இருந்திருக்கும் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 'UL2272' வகை அல்லாத 'பிஎம்டி'கள் மற்றும் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 'பிஎம்டி'களால் தீ அபாயம் உள்ளது என்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்கு இவை பங்கம் விளைவிக்கலாம் என்றும் குடிமைத் தற்காப்புப் படை அறிவுறுத்தியுள்ளது.