வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் வெற்றுத்தளத்தில் 19 வயது ஆடவர் ஒருவரும் இதர இரண்டு பேரும் சூதாடிக்கொண்டு இருந்ததை 51 வயது மாது ஒருவர் படம் எடுத்தார்.
அதையடுத்து அந்த 19 வயது ஆடவர் அந்த மாதைப் பின்தொடர்ந்து சென்று அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையொட்டி அந்த ஆடவர் கைதாகி இருக்கிறார்.
ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1ல் உள்ள புளோக் 340ல் உதவி தேவை என்று புதன்கிழமை இரவு சுமார் 730 மணிக்குத் தனக்குத் தகவல் வந்தது என்று போலிஸ் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
வேண்டுமென்றே கடுமையான காயம் விளைவித்ததற்காக அந்த ஆடவர் கைதானதாகவும் போலிஸ் குறிப்பிட்டது.
வேண்டும் என்றே அலைக்கழித்ததாகக் கூறப்படுவதை ஒட்டியும் ஆடவர் விசாரிக்கப்பட்டு வருகிறார் என்றும் போலிஸ் கூறியது.
இதனிடையே, உதவி தேவை என்று ஜூன் 2ஆம் தேதி இரவு சுமார் 7.50 மணிக்குத் தனக்கு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
ஒருவர் காயத்துடன் காணப்பட்டார் என்றும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்து விட்டார் என்றும் அந்தப் படை மேலும் தெரிவித்தது.
இவ்வேளையில், தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாதைப் பின்தொடர்ந்து ஆடவர் ஒருவர் சென்றதைப் பார்த்ததாக அப்பகுதி குடியிருப்பாளர் ஒருவர் கூறினார் என்று ஷின் மின் சீன மொழி நாளிதழ் குறிப்பிட்டது.
எடுத்த படத்தை அழித்துவிடும்படி அந்த மாதிடம் ஆடவர் கூறினார். ஆனால் மாது அதைப் பொருட்படுத்தவில்லை. தொர்ந்து அந்த மாதை ஆடவர் தாக்கினார்.
அவரின் வாயில் இருந்து ரத்தம் வந்தது. அவ்வழியே வந்தவர்கள் மாதுக்கு உதவினர் என்று குடியிருப்பாளர் கூறியதாக அந்தச் செய்தித்தாள் தெரிவித்தது.