மனநலனைப் பாதுகாக்க அண்மையில் பிரெஞ்சு பொது விருது டென்னிஸ் போட்டியிலிருந்து விலகிய வீராங்கனை நவோமி ஒசாக்காவுக்கு ஆதரவு தெரிவித்து, மனநலனைப் பேணுதல் முக்கியம் என்பதை அதிபர் ஹலிமா யாக்கோப் வலியுறுத்தியுள்ளார். அது பற்றி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று (ஜூன் 6) பதிவிட்டார் அதிபர்.
பல்லாண்டுகளாக மனநல விவகாரங்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அதிபர் ஹலிமா, ஜப்பானிய வீராங்கனையான நவோமி ஒசாக்கா மீது தமக்கு பெரிய மரியாதை இருப்பதாகக் கூறினார்.
போட்டியிலிருந்து விலகும் முடிவு 23 வயது நவோமிக்கு மிகவும் சிரமமாக இருந்திருக்கும். ஏனென்றால், அவர் தமது தொழிலின் உச்சத்தில் இருக்கிறார் என்றார் அதிபர்.
நான்கு முறை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்றுள்ள நவோமி, பிரெஞ்சு பொது விருதுப் போட்டியின் முதல் சுற்றில் வென்ற பின்னர், விளையாட்டளர்களுக்கான கட்டாய செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். அதனால் தாம் தகுதிநீக்கம் செய்யப்படலாம் என்று எச்சரிக்கப்பட்ட பின்னர், நவோமி போட்டியைவிட்டு விலகினார்.
ஆட்டங்களுக்குப் பிந்திய செய்தியாளர் கூட்டங்கள் மனநலனைப் பாதிக்கக் கூடியவை என்று முன்னதாகக் கூறியிருந்த நவோமி, தமக்கு 2018லிருந்து மன அழுத்தம் இருந்து வந்ததைப் பற்றி மனம் திறந்தார்.
நவோமி சரியான முடிவை எடுத்துள்ளர் என்று கூறிய அதிபர் ஹலிமா, உலகம் எங்கும் மனநலப் பிரச்சினையால் அவதிப்படும் பல மில்லியன் பேருக்கு அவர் ‘வலுவான சமிக்ஞையை’ தந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
நச்சுத்தன்மையும் மன அழுத்தமும் நிறைந்த சூழலிலிருந்து விலகுவது தற்காலிகப் பின்னடைவைத் தந்தாலும் அது சரியே என்று நவோமியின் முடிவு காட்டியுள்ளதாக திருவாட்டி ஹலிமா தெரிவித்தார்.
கொவிட் சூழலால் மனநலன் பற்றி அதிகமாகப் பேசப்படுவதைச் சுட்டிக்காடிய அதிபர் ஹலிமா, தற்காலிகப் பின்னடைவுகளிலிருந்து வெளியேறுவதற்கான மன உறுதியை பலர் வளர்த்துக் கொண்டுள்ளதாகக் கூறினார். ஆனால் மன உறுதியை இளம் வயதிலிருந்து வீட்டிலும் பள்ளியிலும் வளர்க்க வேண்டும் என்றார் அவர்.
பள்ளித் தேர்வுகளில் சரியான தேர்ச்சி பெறாத காரணத்தால் சிறுவர்கள் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டது பற்றிய செய்திகளைப் படிக்கும்போது சோகம் ஏற்படுகிறது என்ற அதிபர், பள்ளித் தேர்ச்சி ஒன்றை வைத்தே சுய மதிப்பு மதிப்பிடப்படுவதாக அவர்கள் கருதுவதைச் சுட்டினார்.
வீட்டிலும் பள்ளியிலும் வேலையிடத்திலும் ஆக்ககரமான, கைத்தூக்கிவிடும் உரையாடல்கள் தேவை என்றார் அவர்.
இக்காலகட்டத்தில் பெண்களே அதிக மனச்சுமை தாங்குகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வீட்டிலும் சமூகத்திலும் பரிவும் கருணையும் இன்னும் அதிகம் காட்டப்படலாம் என்றும் அதிபர் வலியுறுத்தினார்.