தங்கள் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாகவும் நட்பார்ந்தும் நீடித்து வரும் தற்காப்பு உறவுகளை சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் சீனத் தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்கேவும் மறுஉறுதிப்படுத்தி உள்ளனர்.
அமைச்சர்கள் இருவரும் நேற்று காணொளி வழியாகக் கலந்துரையாடியபோது, சிங்கப்பூர் -சீனா இடையே அரசதந்திர உறவு மலரத் தொடங்கி கடந்த ஆண்டுடன் 30 ஆண்டுகளானதை நினைவுகூர்ந்தனர். அதையொட்டி, சீன ஆகாயப் படையின் 'பா யி' வான்சாகசக் குழுவினர் முதன்முறையாக சிங்கப்பூர் ஆகாயக் காட்சியில் பங்கேற்றனர்.
கொவிட்-19 பரவல் சூழலிலும் இரு நாடுகளும் தொடர்ந்து கலந்துறவாடி வந்ததாகத் தற்காப்பு அமைச்சு ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இருதரப்பு, பலதரப்புப் பயிற்சிகள், உயர்மட்ட நிலையிலான வருகைகள், நிபுணத்துவப் பரிமாற்றங்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
வட்டாரப் பாதுகாப்பு மேம்பாடுகள், கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் தத்தமது நாடுகளின் ராணுவத்தினர் எத்தகைய ஆதரவை வழங்கினர் என்பது பற்றியும் இரு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களும் பேசினர்.
ஆசியான் - சீனா தற்காப்பு ஒத்துழைப்பையும் ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டம் - பிற நாடுகள் (ஏடிஎம்எம்-பிளஸ்) கட்டமைப்பையும் வலுப்படுத்தும் வழிகள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.
கடந்த 2019ஆம் ஆண்டில் செய்துகொண்ட மேம்படுத்தப்பட்ட உடன்பாட்டின்கீழ், தற்காப்பு உறவை வலுப்படுத்தக் கொண்டு உள்ள கடப்பாட்டையும் அவர்கள் மறுஉறுதி செய்தனர்.