கேலாங் லோரோங் 20ல் உள்ள பின்சந்தில் மார்ச் 18ம் தேதி ஆடையின்றி ஆடிக்கொண்டே குப்பை, பீர் டின்கள் உள்ளிட்ட பொருட்களை எரித்த மாதுக்கு நான்கு மாதங்கள், ஆறு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பொதுவெளியில் ஆடையின்றி இருந்தது, தீங்கு ஏற்படும் அச்சத்தை உண்டாக்கும் என்று தெரிந்தும் பொருட்களை வைத்தது உட்பட மூன்று குற்றச்சாட்டுகளை 33 வயது நொராஸீடா முகமது ஸயின் நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
அச்சத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தே பொதுவிடத்தில் பொருட்களை வைத்ததற்காக தண்டனைபெற்ற முதல் நபர் அவர் ஆவார்.
முன்னதாக, பிப்ரவரி 18 அன்று பொய்சொல்லி போலிஸ் கண்டோன்மண்ட் கட்டடத்துக்குள் நுழைந்த நொராஸீடா, புளுடூத் ஸ்பீக்கர் உள்ளிட்ட பொருட்களையும் சிவப்பு உறையில் மஞ்சள் தாயத்து, சில தாட்கள் உள்ளிட்டவற்றையும் வெள்ளைப் பெட்டியில் வைத்துவிட்டு சென்றார்.
மாலை சுமார் 4 மணிக்கு போலிசார் அவற்றைக் கண்டு பிடித்தனர். நொராஸீடா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட போது, பொருட்களை அங்கு வைத்ததற்கு அவர் சரியான விளக்கம் கூறவில்லை.
நொராஸீடா 2005லிருந்து பற்பல குற்றங்களுக்காக தண்டனைபெற்றதைச் சுட்டிக்காட்டிய அரசாங்க வழக்கறிஞர் அவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கும்படி நீதிபதியைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அண்மைய சம்பவங்கள் நடந்தபோது வீடில்லாமல் இருந்த நொராஸீடா, தமக்கு ஆறு பிள்ளைகள் இருப்பதாகக் கூறி மாறுவதற்கு வாய்ப்பை நீதிமன்றத்தில் கோரினார்.