அங் மோ கியோ வட்டாரத்தில் தொடர்ச்சியாக பூனைகள் துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் 37 வயது ஆடவர் ஒருவர் மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டது. விலங்குகளைக் கொடுமை செய்த ஒரு குற்றச்சாட்டு லியோ வெய் லியாங் எனப்படும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அங் மோ கியோ ஸ்திரீட் 32ல் உள்ள புளோக் 352ஏ கார்நிறுத்த படிக்கட்டில் பேனா கத்தியால் பூனை ஒன்றை அவர் மே 2ஆம் தேதி வெட்டியதாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அன்றைய தினம் முற்பகல் 11 மணியளவில் சம்பவம் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அவர் மீது, இணையம் வழியாக நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது கேமரா முன் தோன்ற அவர் மறுத்துவிட்டார். அங் மோ கியோ வட்டாரத்தில் தொடர் சம்பவமாக பூனைகள் வெட்டப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் லியோ இருக்கலாம் என அரசுத் தரப்பில் நம்பப்பட்டது. மேலும் அவரை மனநலக் கழகத்தில் இரு வாரங்கள் விசாரணைக் காவலில் வைக்க அனுமதி கோரப்பட்டது.
அதற்கு நீதிபதி ஒப்புதல் வழங்கினார். விலங்கு மற்றும் கால்நடை மருத்துவச் சேவை அதிகாரிகள் போலிசாரின் துணையுடன் நேற்று முன்தினம் லியோவைக் கைது செய்தனர். கடந்த ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் இருந்து அந்த வட்டாரத்தில் குறைந்தபட்சம் பத்து பூனைகள் தங்களது உடலில் ஆழமான வெட்டுகளுடன் காணப்பட்டன. அங் மோ கியோ அவென்யூ 8க்கும் அவென்யூ 1க்கும் இடைப்பட்ட இடங்களில் சம்பவம் நிகழ்ந்தன.

