பல பிரிவுகளில் சிஓஇ கட்டணங்கள் ஏற்றம்
வாகன உரிமைச் சான்றிதழ்களுக்கான (சிஓஇ) ஆகக் கடைசி ஏலக்குத்தகையில் பெரும்பாலான பிரிவுகளில் கட்டணங்கள் உயர்ந்தன.
1,600சிசி அளவிலான சிறிய ரக கார்களுக்கான சிஓஇ $41,801லிருந்து $48,510ஆகக் கூடியது. 1,600சிசிக்கு மேற்பட்ட பெரிய ரக கார்களுக்கான சிஓஇ $58,089லிருந்து $60,109ஆக உயர்ந்தது.
மோட்டார்சைக்கிள்கள் தவிர மற்ற வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய பொதுப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ $62,000லிருந்து குறைந்து $61,112, ஆனது. வர்த்தகப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ $41,701லிருந்து குறைந்து $37,002 ஆனது. ஆனால், மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணம் 8,701லிருந்து $8,703ஆக அதிகரித்தது.
பெரும்பாலும் இரு வாரங்களுக்கு ஒருமுறை நடைபெறும் சிஓஇ ஏலக்குத்தகை இம்முறை மூன்று வாரங்கள் கழித்து நடைபெற்றது. ஒரு மாதத்தில் உள்ள வாரங்களில் எண்ணிக்கையப் பொறுத்து சிலவேளைகளில் இவ்வாறு நடப்பதுண்டு.
ஆசிய தரவரிசையில் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களுக்கு முதலிடம்
சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகமும் (என்யுஎஸ்) நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) ஆசியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களாக குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (கியூஎஸ்) ஆண்டு உயர்கல்வி தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் தரவரிசையில், ஆசிய பல்கலைக்கழகங்களின் வரிசையில் தொடர்ந்து நான்காம் ஆண்டாக சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
உலக அளவில் 1,300 பல்கலைக்கழகங்களில் என்யுஎஸ் 11வது இடத்திலும் என்டியு 12வது இடத்திலும் வந்துள்ளன.
கல்வி நற்பெயர், துறை, மாணவர் விகிதம், அனைத்துலக ஆசிரியர்களின் விகிதம், அனைத்துலக மாணவர்களின் விகிதம் உள்ளிட்ட அம்சங்களில் பல்கலைக்கழகங்களை அந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. முதல் பத்து இடங்களில் அமெரிக்க, பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.
நாணய ஆணையம்: குறைவான பணநோட்டுகள் வெளியிடப்பட்டன
மின் கட்டண பயன்பாடு அதிகரிப்பு காரணமாக குறைவான பணநோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது. வங்கிகளின் தானியக்க இயந்திரங்களில் பணம் எடுப்பது, காசோலைகளின் பயன்பாடு ஆகியவையும் குறைந்துள்ளன என்று அது குறிப்பிட்டது. $2, $5, $10, $50 நோட்டுகள் அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் 24 விழுக்காடு குறைவாக வெளியிடப்பட்டன. வங்கிகளின் தானியக்க இயந்திரங்களில் பணம் எடுப்பது 16 விழுக்காடும், காசோலைகளின் பயன்பாடு 23 விழுக்காடும் குறைந்தன.
இணைய நிதி பரிவர்த்தனை சேவையான பேநஃவ் போன்ற மின்-கட்டணங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளால் இது சாத்தியமாகியுள்ளதாக நாணய ஆணையம் நேற்று வெளியிட்ட அதன் முதல் நீடித்த நிலைத்தன்மை அறிக்கையில் குறிப்பிட்டது.
போராட்டம் தொடர்பான டுவிட்டர் செய்திக்கு போலிஸ் மறுப்பு
ஆஸ்திரேலிய தூதரகத்திற்கு வெளியே இன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் திட்டங்கள் தொடர்பாக போலிசிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதாக டுவிட்டரில் வெளியான தகவலை போலிஸ் மறுத்துள்ளது.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் சிங்கப்பூருக்கு வருவது தொடர்பான ஆர்ப்பாட்டம்போல அது தெரிகிறது. டுவிட்டர் பயனாளர் ஒருவர் போராட்டத் திட்டம் குறித்து போலிசிடம் தாம் தெரிவித்ததாகவும் அதற்கு அனுமதி கிடைக்கக்கூடும் என்றும் தமது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் போராட்டம் தொடர்பாக எந்தவொரு விசாரணையோ விண்ணப்பமோ தங்களுக்கு வரவில்லை என்று போலிஸ் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்தத் தகவலில் ஒற்றை மனிதராக ஆஸ்திரேலிய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். ஆஸ்திரேலியப் பிரதமருக்கு எதிரான ஹேஷ்டேக் ஒன்றையும் அந்த டுவிட்டர் செய்தி தாங்கி இருந்தது.

