சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத்தை மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை அண்மைய இனவாத சம்பவங்கள் நினைவுபடுத்துவதாக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவல் சார்ந்த மனஅழுத்தங்களால் சில வேளைகளில் இதுபோன்ற உரசல்களால் ஏற்படலாம் என்ற அவர், தாங்கள் பல்லினச் சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை நினைவில் கொண்டு, பிணைப்பை வலுப்படுத்தத் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று சிங்கப்பூரர்களிடம் அவர் வலியுறுத்தினார்.
"அது ஒரு தடுப்பூசி போன்றது. இன எதிர்ப்பு உணர்வுகளுக்கு எதிரான தடுப்பூசி. தொடர்ந்து அனைவரும் இணைந்து பணியாற்றுவது அவசியம். அடிப்படையில், கிருமிக்கு இனமோ சமயமோ மொழியோ தெரியாது," என்றார் திரு கான்.
இனவாத சம்பவங்கள் குறித்தும் அவற்றுக்கு கொரோனா பரவல் எவ்வகையில் காரணமாகக்கூடும் என்றும் இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ் முரசு கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

