சிங்கப்பூரில் புதிதாக 13 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 62,236ஆக உயர்ந்தது.
புதிதாக கொரோனா தொற்றிய 13 பேரில் நால்வர் சமூகத்தினர். அவர்களில் இருவரைத் தொடர்பில்லாத வகையில் கிருமி தொற்றி விட்டது.
தொடர்பினால் பாதிக்கப்பட்ட மற்ற இருவரில் ஒருவர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்; இன்னொருவர்க்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்காணிப்புப் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் புதிதாக எவரையும் கிருமி தொற்றவில்லை.
எஞ்சிய ஒன்பது பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்கள் அனைவர்க்கும் இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் எழுவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
முன்னதாக, நேற்று முன்தினம் சமூகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர்க்கு எந்தக் கிருமித்தொற்றுக் குழுமத்துடனும் தொடர்பில்லை என்றும் அவர் சுங்கை காடுட்டில் உள்ள கிராண்ட்வொர்க் இன்டீரியர் நிறுவனத்தில் பழுதுநீக்குபவராக வேலை செய்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மியன்மாரைச் சேர்ந்த அவர், கடந்த மாதம் 31ஆம் தேதி முதலாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.
சமூகத்தில் கிருமி தொற்றிய இன்னொருவர் மலேசியாவைச் சேர்ந்த 21 வயது சமையலறை உதவியாளர். அவர் 308 ஆங்கர்வேல் சாலையில் செயல்படும் 'ரைஸ் கார்டன்' உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது.
ஆங்கர்வேல் சாலையில் உள்ள என்டியுசி ஃபுட்ஃபேர் கிருமித்தொற்றுக் குழுமத்துடன் அவருக்குத் தொடர்பிருந்தது. அக்குழுமத்தில் இதுவரை 13 பேரை கொரோனா தொற்றிவிட்டது.
நேற்று முன்தினம் பதிவான நான்கு பாதிப்புகளில் எஞ்சிய இருவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். ஒருவர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய சிங்கப்பூரர்; இன்னொருவர் ஈராக்கில் இருந்து வந்த நிரந்தரவாசி.
நேற்று முன்தின இரவு நிலவரப்படி, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒருவர் உட்பட 158 பேர் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 291 பேர் சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களில் தங்கி உடல்நலம் தேறி வருகின்றனர்.

