மக்களிடம் இனப் பற்று இருக்கலாம். அதுவே இனவாதம் ஆகிவிடாது. ஆனால் அந்தப் பற்றை பொது இடங்களுக்குக் கொண்டுவந்து அதை மற்றவர்களிடத்தில் திணித்தால் அது எல்லை மீறியதாக ஆகிவிடும் என்று சட்ட உள்துறை அமைச்சர கா சண்முகம் தெரிவித்துள்ளார்.
CNA938 வானொலி நிகழ்ச்சியில் இடம்பெற்ற அமைச்சரின் பேச்சு, அண்மையில் சில இனவாதச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ள சூழலில் இடம்பெற்றது.
இந்தச் சம்பவங்களில் ஆகக்கடைசியாக இம்மாதம் 5ஆம் தேதி, நிகழ்ந்த ஒரு சம்பவத்தில், கலப்பு இனத் தம்பதியிடம் பேசிய டான் பூன் லீ என்பவர், இந்திய ஆடவர்கள் சீனப் பெண்களுக்கு வலை விரிக்கக்கூடாது என்றார்.
நிறுவனம் நடத்திவரும் டேவ் பிரகாஷ், 26, என்பவர் தன் காதலியான ஜாக்குலின் ஹோ, 27 என்பவருடன் இருந்தபோது அவர்களிடம் அத்தகைய கருத்தை டான் பூன் லீ தெரிவித்தார். அச் சம்பவம் படச்சாதனத்தில் பதிவாகி பிறகு ஃபேஸ்புக்கில் இடம்பெற்றது.
இத்தகைய இதர சில இனவாதச் சம்பவங்களும் அண்மையில் நிகழ்ந்தன. என்றாலும் பகிரங்க மாக இடம்பெற்ற அந்தச் சம்பவம் பரந்த அளவில் குறைகூறல்களுக்கு இலக்கானது. சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்திற்கு மிரட்டல் ஏற்பட்டுவிட்டதோ என்று கூட மக்கள் கேள்வி எழுப்பினர்.
இது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர், தான் அப்படி நினைக்கவில்லை என்றார். "பல இன சமூகமாக இருக்கின்ற ஒரு சமூகத்தில் இனவாதம் இல்லாத ஒரு சமூகத்தை எனக்குக் காட்டுங்கள்," என்று திரு சண்முகம் கேட்டார்.
இன நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதில் சிங்கப்பூர் பெரும் முன்னேற்றத்தைச் சாதித்து இருக்கிறது என்ற அமைச்சர், தனக்குத் தெரிந்தவரை இதர பல இன சமூகங்களைவிட சிங்கப்பூர் எவ்வளவோ சிறப்பானது என்றார்.
சமூகத்தில் இனவாதம் இருக்கும் என்பதை சிங்கப்பூர் தலைவர்கள் எப்போதுமே அங்கீகரித்து வந்துள்ளனர் என்ற அமைச்சர், எல்லா இன மக்களுக்கும் நியாயமான வாய்ப்புகள் இருக்கும் வகையில் அதைச் சரிப்படுத்துவதே முக்கியம் என்றார்.
"நான் இந்தியர், நான் சீனர், நான் மலாய்க்காரர் என்று சொல்லிக் கொள்வதில் தாழ்வு இல்லை. அது நமது கலாசார பலத்தைக் காட்டுகிறது. நாம் நாமேதான், அதை அங்கீகரிக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். இது நமக்குப் பலத்தைத் தருகிறது.
"இதற்கு அப்பால் பார்க்கும்போது நாம் சிங்கப்பூரர்கள். இது பொதுவான அடையாளம். தனிப்பட்ட அடையாளத்தை அங்கீகரித்து, ஏற்றுக்கொண்டு, வலியுறுத்தினாலும் பொது அடையாளத்தை வலியுறுத்த வேண்டும் என்றார் அவர்.

