லாரி ஓட்டுநரின் முகத்தில் குத்திய ஆடவருக்கு $5,600 அபராதம் விதிக்கப்பட்டது.
வேண்டுமென்றே காயம் விளைவித்தது, மற்றவர்களின் பாதுகாப்பைக் கருதாமல் மிதிவண்டி ஓட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளை கனடா நாட்டைச் சேர்ந்த 57 வயது ஜெஃப்ரி டோட் மார்ட்டின் ஒப்புக்கொண்டார்.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி காலை 10.20 மணி அளவில் ஜாலான் யூனோஸில் சிங்கப்பூர் நிரந்தரவாசியான மார்ட்டின் மிதிவண்டி ஓட்டிக்கொண்டிருந்தபோது லாரி ஒன்று அவரைக் கடந்து சென்றது.
பிறகு அந்த லாரியை மார்ட்டின் கடந்து சென்றபோது லாரி ஓட்டு
நரைப் பார்த்து தமது அதிருப்தியைக் காட்டும் வகையில் மார்ட்டின் செய்கை காட்டினார்.
தமது மிதிவண்டியை லாரிக்கு முன்னால் சாலைத் தடத்தின் நடுவே அவர் நிறுத்தினார்.
இதனால் லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தினார். தமது மிதிவண்டியைவிட்டு கீழே இறங்கிய மார்ட்டின் லாரி ஓட்டுநரை வசை பாடினார். லாரியின் சன்னலை அவர் அடித்தார்.
இதையடுத்து, சீன நாட்டவரான 33 வயது சாங் பிங், மார்ட்டினை நோக்கி லாரியைத் திருப்பி அவரை மோத வருவது போல லாரியைச் செலுத்தினார். பிறகு குடுவை ஒன்றை ஏந்திக்கொண்டு லாரியைவிட்டு இறங்கிய சாங், மார்ட்டினை நோக்கி விரைந்தார்.
அப்போது மார்ட்டின் சாங்கின் முகத்தில் குத்தினார். இதன் காரணமாக சாங் தடுமாறி தரையில் விழுந்தார்.
இதனைத் தொடர்ந்து, மார்ட்டின் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. சாங்கிற்கு உதட்டில் காயங்கள் ஏற்பட்டன. அவருக்கு இரண்டு நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்து 48 மணி நேரத்துக்குள் சாங் கைது செய்யப்பட்டார். மார்ட்டின் குத்தியதற்கு முன்பு சாங் லாரியிலிருந்து கீழே இறங்கி அவரை நோக்கி விரைந்ததை மாவட்ட நீதிபதி பிரெண்டா டான் சுட்டினார்.
சிறைத் தண்டனை விதிக்கப்படாதபோதிலும் பெரிய தொகையுள்ள அபராதம் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

