குடிநுழைவுக் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததோடு மற்றவரை அதிகாரியிடம் பொய் பேசத் தூண்டிய குற்றங்களுக்காக இந்திய நாட்டைச் சேர்ந்த 37 வயது ஆடவருக்கு நேற்று 9 மாதம், 2 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பரமசிவம் சீமான் எனப்படும் அந்த ஆடவர், லிட்டில் இந்தியா வாட்டாரத்தில் உள்ள ரோவல் ரோட்டில் உள்ள வீடு ஒன்றின் முதல் வாடகைதாரரான தமது நண்பரை தவறான வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஏமாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த நண்பர், வாடகைக்கு விடப்படும் வீடு பஃப்ளோ ரோட்டில் உள்ள மற்றொரு வீட்டுக்கானது எனக் கருதி ஒப்பந்ததைப் படிக்காமல் கையெழுத்திட்டார். அதன் பின்னர், கூடுதல் வருவாய்க்காக ரோவல் ரோடு வீட்டை தம்மைச் சேர்ந்தவர்களுக்கு பரமசிவம் உள்வாடகைக்கு விட்டு வந்ததாக குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.
அவ்வாறு வாடகைக்கு வந்து தங்கியவர்களில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த அப்துல் காதிர் நைனா என்பவர் சிங்கப்பூரில் தங்க அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்தையும் மீறி 150 நாட்கள் இங்கு இருந்ததன் மூலம் குற்றம் புரிந்தவர்.
வீட்டின் படுக்கை இடத்தை வாடகைக்கு விட்டபோது அப்துல் காதிரிடம் பரமசிவம் எந்தவோர் அடையாள ஆவணத்தையும் கேட்டுப் பெறவில்லை.
அவர் சட்டப்படியானவரா என்பதை அவர் சரிபார்க்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அந்த வீட்டை ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டபோது அப்துல் காதிர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக முதல் வாடகைதாரரை அதிகாரிகள் விசாரித்தபோது, பொய்யான தகவல்களைத் தெரிவிக்குமாறு தம்மிடம் பரமசிவம் கூறியதாக அவர் சொன்னார்.
ஆயினும் அவர் சொன்னபடி செய்யாமல் உண்மை நிலவரத்தை அதிகாரிகளிடம் அவர் விளக்கியதாக ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இச்சம்பவம் மூலம், குடிநுழைவுச் சட்டத்தை மதிக்காமல் பொறுப்பற்ற வகையில் நடந்து குடிநுழைவுக் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்தில் பரமசிவம் ஈடுபட்டதாக ஆணையம் தெரிவித்தது.
முதல் வாடகைதாரருக்குத் தெரியாமல் பரமசிவம் அந்த வீட்டை உள்வாடகைக்கு விட்டிருப்பதை அறிந்த ஆணையம், அந்த வாடகைதாரருக்கு வாய்மொழி எச்சரிக்கையை விடுத்தது.
குடிநுழைவுக் குற்றத்திற்காக அப்துல் காதிருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு மாத சிறை, மூன்று பிரம்படிகள் ஆகியன தண்டனைகளாக விதிக்கப்பட்டன.
குடிநுழைவுக் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை ஆணையம் கடுமையாகக் கருதுகிறது என அறிக்கையைல் குறிப்பிடப்பட்டுள்ளது.