காவல்துறை அதிகாரியைத் தாக்கியவருக்கு சிறை, பிரம்படி
காவல் துறை அதிகாரி ஒருவரை சரமாரியாகத் தாக்கிய இரட்டையர் தொடர்பான வழக்கில் நேற்று முகம்மது ஃபர்ஹான் ஜெஃப்ரி, 27, என்பவருக்கு நேற்று 33 மாதம் நான்கு வாரம் சிறை, மூன்று பிரம்படிகள், $3,500 அபராதம் ஆகியன விதிக்கப்பட்டன. தாக்கப்பட்ட அதிகாரியான சோங் ஜியாவெய், 27, முகத்தில் பலதரப்பட்ட காயங்கள் ஏற்பட்டதன் விளைவாக இரு நாட்கள் அறுவை சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டதோடு 29 நாள் மருத்துவமனையில் தங்குவதற்கான விடுப்பும் அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 74ல் உள்ள புளோக் 755ன் கீழ்த்தளத்தில் சம்பவம் நிகழ்ந்தது.
ஃபர்ஹானும் அவரது மனைவியும் அங்கு அப்போது வாக்குவாதம் செய்ததால் காவல்துறையினர் வந்தனர். அவர்களிடம் விசாரணை தொடங்கியபோது அந்த புளோக்கில் குடியிருந்த ஃபர்ஹானின் இரட்டை சகோதரர் முகம்மது ஃபிக்ரி ஜெஃப்ரி தலையிட்டு அதிகாரிகளின் முகத்தை நோக்கி விரலை நீட்டி ஆக்ரோஷத்துடன் சத்தம் போட்டார். பின்னர், "எந்த அதிகாரியின் முகம் உனக்குப் பிடிக்கவில்லை," என்று ஃபர்ஹானிடம் ஃபிக்ரி கேட்டார். சார்ஜண்ட் சோங்கை அவர் காட்டினார். அதனைத் தொடர்ந்து அந்த அதிகாரியை இரட்டையர் சரமாரியாகத் தாக்கினர். அதிகாரியைத் தாக்கியது, பெண் காவலரை தகாத வார்த்தைகளால் புண்படுத்தியது, காவல்துறை வாகனத்தைச் சேதப்படுத்தியது, குண்டர் கும்பலில் உறுப்பினராக இருந்தது என தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஃபர்ஹான் ஒப்புக்கொண்டார். அவரது சகோதரர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
உயிரைப் பறித்த விபத்து பற்றி விசாரிக்க எஸ்எம்ஆர்டி குழு
எஸ்எம்ஆர்டி நிறுவனம் தனது அங் மோ கியோ பணிமனை யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணைக் குழு ஒன்றை அமைத்து உள்ளது. அன்றைய தினம் சிற்றுந்து ஒன்றை பழுதுபார்க்க 'ஜேக்' கருவி மூலம் அப்பேருந்து உயர்த்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது எதிர் பாராதவிதமாக தொழில்நுட்பர் ஒருவர் அச்சம்பவத்தில் மாண்டார். மற்றோர் ஊழியர் காயமடைந்தார். இவ்விபத்து நடந்தது எவ்வாறு என்று தீர விசாரிக்க சுயேச்சையான இயந்திரப் பொறியியல் நிபுணரும் எஸ்எம்ஆர்டி நிறுவன இயக்குநரவை உறுப்பினருமான ஒருவரின் தலைமையின் கீழ் குழு அமைக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டு தப்பிய ஆடவருக்கு கூடுதலாக ஆறு மாத சிறை
20 ஆண்டுகளாக சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பி வந்த ஆடவருக்கு நேற்று கூடுதலாக ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குடிநுழைவு அதிகாரியை தவறாக வழிநடத்தியது, 2000ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணைக்கு வரத் தவறியது ஆகிய குற்றங்களுக்காக இந்தக் கூடுதல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய ரான சிவகுமார் ராமச்சந்திரன், 46, எனப்படும் அந்த ஆடவர் சட்டவிரோதக் குடியேறிகளை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாகக் கடத்தி வந்த குற்றத்திற்காக 1999 செப்டம்பர் 24ஆம் தேதி தண்டிக்கப்பட்டார். ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் அப்போது அவருக்கு விதிக்கப்பட்டன. பிணையில் வெளியே இருந்த அவர், 1999 அக்டோபரில் வேறொருவரின் கடப்பிதழைப் பயன்படுத்தி மலேசியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். பல காலமாகத் தேடப்பட்டு வந்த சிவகுமாரை மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கடந்த ஆண்டு மார்ச் 4ஆம் தேதி சிங்கப்பூர் லஞ்ச ஊழல் புலன் விசாரணைப் பிரிவு கைது செய்தது. இவ்வாண்டு ஏப்ரல் 16ஆம் தேதி இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஐந்தாண்டு சிறைவாசம் முடிந்த பின்னர் கூடுதலாக ஆறு மாத சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க நேற்று உத்தரவிடப்பட்டது.

