விஜயவாடா: ஆந்திரா மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவைச் சந்தித்து மூன்று தலைநகரம் அமைப்பது குறித்து ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
ஆந்திரா மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெலுங்கானாவுக்கு ஹைதராபாத் தலைநகரமாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியை ஆந்திராவின் தலைநகரமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அமராவதியோடு விசாகப்பட்டினம், கர்னூலையும் உள்ளடக்கி மூன்று இடங்களில் தலைநகர் செயல்படும் திட்டத்தை அறிவித்தார். அதன்படி அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும் விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும் கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதற்கான மசோதாவும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆந்திரா முழுவதும் தலைநகரப் பணிகளை விரிவாக்கி வட்டாரமயமாக்குவது ஜெகன்மோகன் ரெட்டியின் திட்டமாகும்.
இந்தச் சூழ்நிலையில் அமித் ஷாவைச் சந்தித்துள்ள முதல்வர் ஜெகன், கர்னூலுக்கு உயர்நீதிமன்றத்தை மாற்றும் பணிகளை துரிதப் படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்தச் சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்துக்குத் தேவையான பல்வேறு கோரிக்கைகளையும் அவர் முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய 13 மருத்துவக் கல்லூரி களைத் தொடங்குவதற்கான அனுமதி, அதற்குத் தேவையான நிதி, ஆந்திராவுக்கு வழங்க வேண்டிய தொகை உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.