தடுப்பூசிகளைப் பயன்படுத்தும் நாடுகளில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஆனால்...
மொடர்னா, ஃபைசர்பயோஎன்டெக், ஆஸ்ட்ரா ஸெனகா ஆகிய தடுப்பூசிகளைப் பயன்படுத்தும் நாடுகளில் கொவிட-19 தொற்று குறைந்துள்ளது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் முதலில் தலைகாட்டிய உருமாறிய கிருமியை (பீட்டா கிருமி) ஒழிப்பதில் இந்த ஊசிகள் அவ்வளவாக பலன் தரவில்லை என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்து உள்ளது.
அமெரிக்காவின் ஜேபி மோர்கன் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை புதுப்பிக்கப்பட்டது. பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அந்த நாடுகளில் தொற்று குறைகிறது. இதைக் காட்டும் ஓர் அட்டவணை அந்த அறிக்கையில் இடம்பெற்று இருந்தது.
இது பற்றி சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்தார்.
தடுப்பூசி போடுவது அதிகரிக்கையில் தொற்று குறைகிறது. இது ஊக்கமூட்டுவதாக இருக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இருந்தாலும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்றவையும் இதில் முக்கியம் என்பதை அவர் சுட்டினார்.
உருமாறிய கிருமிகளை ஒழிப்பதில் இந்தத் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு ஆற்றலுடன் இருக்கின்றன; இப்போது போடப்படும் மொடர்னா, ஃபைசர் பயோஎன்டெக், ஆஸ்ட்ரா ஸெனகா ஆகிய தடுப்பூசிகள் பற்றிய விவரங்கள்; அவை எப்படி வேலை செய்கின்றன; அவற்றால் ஏற்படக்கூடிய வேண்டாத விளைவுகள் என்ன என்பது பற்றிய புதிய தகவல்களையும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த மூன்று தடுப்பூசிகளும் உருமாறிய பீட்டா கிருமியை ஒழிப்பதில் அவ்வளவு ஆற்றலுடன் இல்லை என்பது ஆய்வுக்கூட பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால் ஆய்வுக்கூடத்திற்கு வெளியே நடைமுறையில் இவை எந்த அளவுக்குச் செயல்படுகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பீட்டா கிருமிப் பரவல் வேகம் அமெரிக்காவில் இதுவரை குறைவாகவே இருக்கிறது. ஆனால் பிரான்ஸ், ஜப்பானில் அது அதிகம் பரவத் தொடங்கி இருக்கிறது.
சிங்கப்பூரில் இப்போது அதிகம் தலைகாட்டி இருக்கும் டெல்டா என்ற உருமாறிய கிருமிக்கு எதிராக அந்தத் தடுப்பூசிகள் எந்த அளவுக்குச் செயல்படுகின்றன என்பது பற்றி அந்த அறிக்கையில் தகவல் இல்லை.