இதய தசைநார் தடிப்புப் பிரச்சினை நீங்கி அனைவரும் குணம்
சிங்கப்பூரில் கொவிட்-19 இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்ட நான்கு இளையர்களுக்கு இதய தசைநார் தடிப்புப் பிரச்சினை ஏற்பட்டது. அவர்களுக்கு வயது 18 முதல் 30 வரை என்று தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் எல்லாரும் நன்கு குணமடைந்துவிட்டார்கள் என்று கொவிட்-19 தடுப்பூசி வல்லுநர்கள் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டாவது ஊசி போட்டுக்கொண்டதற்கு ஒரு சில நாட்களில் இது ஏற்பட்டதாக அவர்களில் பலரும் கூறினர்.
இருந்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படக்கூடிய பலன்கள் அவற்றால் ஏற்படும் வேண்டாத விளைவுகளைவிட அதிகம் என்பதை அந்தக் குழு சுட்டிக்காட்டியது.
இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், குறிப்பாக இளையர்கள், பதின்ம வயதினர் முன்னெச்சரிக்கையாக, ஒரு வார காலம் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடக்கூடாது என்று அந்த வல்லுநர் குழு ஆலோசனை தெரிவித்துள்ளது.
ஃபைசர் ஊசியே பலரின் விருப்பம்
சிங்கப்பூரில் மொடர்னா தடுப்பூசியைவிட ஃபைசர் பயோஎன்டெக் ஊசியையே மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். 12 முதல் 39 வரை வயதுள்ளவர்கள் பதியலாம் என்று அறிவிப்பு வெளியானதுமே ஃபைசர் தடுப்பூசிக்கே அதிகம் பேர் முன்பதிவு செய்தனர்.
சிங்கப்பூரர்கள் இந்த இரண்டில் எந்த ஊசியை வேண்டுமானாலும் தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் வேண்டாத விளைவுகள் குறைவு என்று கூறப்படுவதன் காரணமாக சிலர் ஃபைசர் ஊசியை விரும்புகிறார்கள் என்று தெரிகிறது. 18 வயதுக்குக் குறைவான இளையர்களுக்கு ஃபைசர் ஊசி மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
மொடர்னா ஊசி போட்டுக்கொள்ள விரும்புவோருக்கு இதன் காரணமாக முன்னதாகவே வாய்ப்பு கிடைக்கும் என்று சில நாட்களுக்கு முன் கொவிட்-19 அமைச்சுகள் நிலை பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான சுகாதார அமைச்சர் ஓங் யி காங் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனிடையே, மொடர்னா ஊசி போட்டுக்கொள்ள விரும்வோர் ஜூன் 12ஆம் தேதியே அதற்கான வாய்ப்பைப் பெற முடிந்ததாகவும் ஃபைசர் ஊசி எனில் ஜூன்21 வரை காத்திருக்க வேண்டும் என்பதும் வெள்ளிக்கிழமை தெரியவந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
வரம்பு 250 பேராக உயரும்
நிகழ்ச்சிக்கு முன்னதாக கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் மேடைக்கலை நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள், சமய வழிபாடுகளில் நாளை முதல் 250 பேர் வரை கலந்துகொள்ளலாம். இப்போது இந்த எண்ணிக்கை 100 பேராக இருக்கிறது.
நிகழ்ச்சிக்கு முன்னதாக பரிசோதனை நடத்தப்படும் ஏற்பாடு இல்லாத நிகழ்ச்சி களில் கலந்துகொள் வோருக்கான வரம்பு 50 ஆக தொடர்ந்து இருந்துவரும்.
முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு முன்பரிசோதனை இராது என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை தொழுகைக்கு 4 பள்ளிவாசல்களில் அதிக இடம்
சிங்கப்பூரில் நான்கு பள்ளிவாசல்களில் ஜூன் 25ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை தொழுகை இடங்கள் அதிகரிக்கப்படும். சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் இதனைத் தெரிவித்தது. சூழ்நிலை அனுமதித்தால் தொடர்ந்து வரும் வாரங்களில் மேலும் பல பள்ளிவாசல் களில் கூடுதல் தொழுகை இடங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் இந்த அமைப்பு கூறியது.
இதனிடையே, இணைய முன்பதிவு முறை மூலம் அன்றாட தொழுகைக்கு 50 பேரை பள்ளிவாசல்கள் தொடர்ந்து அனுமதித்து வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

