சிங்கப்பூரில் ஐந்து காசு நாணயத்தின் புழக்கம் அருகி வருவதால், அந்த நாணயத்தின் பயன்பாடு நீடிக்குமா என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.
1967ல் முதன்முறையாக உருவாக்கப்பட்ட ஐந்து காசு நாணயம் அதன் பின்னர் மூன்று முறை வடிவம் மாற்றப்பட்டது.
ஒரு காலத்தில் சில்லறையாகத் தேவைப்பட்டது ஐந்து காசு. இன்று ஐந்து காசு சில்லறையாகக் கிடைத்தால் சில வாடிக்கையாளர்கள் குறைபட்டுக் கொள்வதாகவும் பணம் செலுத்துவோர் பெரும் பாலும் அவற்றை சில்லறையாகத் தருவதில்லை என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய கடைக்காரர்கள் பலர் கூறினர்.
பெரும்பாலும் வயது மூத்த வாடிக்கையாளர்களே ஐந்து காசு நாணயங்களைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதாகக் கூறினார் தியோங் பாருவில் உள்ள ஸீடீபி சீன மருந்துக்கடையில் பணியாற்றும் திரு ரிச்சர்ட் யிப்.
எனினும் சில கடைகள் அந்த நாணயம் சட்டப்படி செல்லுபடியாகும் என்பதால் அதனை ஏற்கச் செய்கின்றன.
"பொருள்கள் சேவைகளுக்கான கட்டணம் வாங்குவோருக்கும் விற்போருக்கும் இடையிலான ஒப்பந்தம்" என்பதால், கட்டணத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது வர்த்தகங்களின் விருப்பம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறுகிறது.
நாணயச் சட்டத்தின் கீழ் ஐந்து காசு நாணயங்களை ஏற்க மறுப்பதற்கு வர்த்தகங்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் அது குறித்து கட்டணம் செலுத்துவோரிடம் முன்கூட்டியே எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
சராசரியாக, ஒவ்வொரு மாதமும் இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட ஐந்து காசு நாணயங்களைத் தயாரிப்பதாக ஆணையம் கூறியது. 2002ல் ஒரு முறை ஐந்து காசு நாணயத்தைத் தயாரிப்பதை நிறுத்தியது ஆணையம். தற்போது, நாணயத்துக்கான தேவை, பொதுமக்கள் கருத்து ஆகியவற்றைக் கண்காணித்து அதனை மீட்டுக் கொள்வது பற்றி முடிவெடுக்கும் என்று ஆணையம் கூறியது.