துவாஸ் வட்டாரத்தில் கட்டப்பட்டு வரும் கிடங்கு ஒன்றின் கட்டு மானத் தளத்தில் கடந்த வியாழக்கிழமை ஆடவர் ஒருவர் மாண்டு கிடந்தார். அவர் தவறி விழுந்து உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
துவாஸ் சவுத் எவன்யூ 14ல் நடந்த அந்தச் சம்பவம் பற்றி தங்களுக்கு வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு அழைப்பு வந்ததாகப் போலிசார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர். அவ்விடத்துக்குச் சென்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், அந்த 25 வயது ஆடவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். அச்சம்பவம் பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் குற்றம் ஏதும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் இல்லை என்று போலிசார் கூறினர்.
லோகோஸ் துவாஸ் தளவாட மையம் கட்டப்பட்டு வரும் இடத்தில் சம்பவம் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட ஆறு பாடாங் திடல்கள் அளவிலான இடத்தில் மையம் கட்டுப்பட்டு வருகிறது. தளவாட மையம் முழுமை பெறும்போது அங்கு ஓர் இரண்டு மாடி கிடங்கும் மற்றொரு நான்கு மாடி கிடங்கும் இருக்கும். கட்டுமானத்தின் முதல் கட்டம் இவ்வாண்டு நான்காம் காலாண்டில் முடிவுறும் என்று கூறப்படுகிறது.
லோகோஸ் நிறுவனத்தின் இணையத்தளம், கட்டடத்தின் முதல் தளத்தில் ஆபத்தான சரக்கு களுக்கு அனுமதி பெற்ற கிடங்கு அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சிங்கப்பூரில் 14 வேலையிட மரணங்களும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை, வேலையிடத்தில் காயம் ஏற்பட்ட கிட்டத்தட்ட 3,300 சம்பவங்களும் நிகழ்ந்தன.