கடந்த வாரத்தில் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளிகளில் ஆடையின்றி திரிந்த ஆடவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. இயோ சீ வேய், 24, பொது இடத்தில் நிர்வாணமாகத் தோன்றியதன் தொடர்பில் ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.
தோ பாயோ லோரோங் 8 புளோக் 212ல் உள்ள திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் இயோ ஆடையின்றி காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரை மனநலப் பரிசோதனைக்காக மனநலக் கழகத்தில் இரண்டு வாரங்கள் காவலில் வைக்குமாறு மாவட்ட நிதிபதி ரோனல்ட் குவீ உத்தரவிட்டார்.
ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் பொது இடத்தில் தொல்லை தந்தது, பொது இடத்தில் வெறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டது ஆகியவற்றுடன் போக்குவரத்து விதிமீறல்களின் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் போலிசார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கடந்த வெள்ளிக் கிழமை கூறியிருந்தனர்.
யூனோசில் உள்ள ஒரு சாலைச் சந்திப்பில் மோட்டார்சைக்கிளில் ஓர் ஆடவர் ஆடை இல்லாமல் அமர்ந்துகொண்டிருந்த புகைப்படம், கடந்த ஜூன் 10ம் தேதி பகிரப்பட்டது.
அதே நாளில், அவரைப் பற்றிய காணொளி ஒன்றும் பரவியது. அதில் அவர் தீவு விரைவுச் சாலையில் 100 கிலோமீட்டர் வேகத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தார். அடுத்து ஆடவர் ஆடையின்றி கார் ஒன்றின் மேலே ஏறிய காணொளி கிடைத்தது. கார் ஓட்டுநர் கைபேசியில் பேசியபடி அந்த விடத்தை விட்டு நகர்ந்ததைக் காண முடிந்தது.
பொது இடத்தில் ஆடையின்றி தோன்றிய வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு மூன்று மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது 2,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

