மலேசியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், இங்கு காய்கறிகளின் வரத்து பாதிக்கப்பட்டு சில ஈரச் சந்தைகளில் காய்கறிகளின் விலை சற்று கூடியுள்ளது.
தக்காளி விலைதான் ஆக அதிகமாக இரண்டு மடங்கு கூடி, கிலோவுக்கு 3 வெள்ளி விலை வரை விற்கப்படுகிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இங்குள்ள சில ஈரச்சந்தைகளுக்குச் சென்று விலை களைக் கேட்டறிந்தபோது அது தெரியவந்தது.
தேக்கா சந்தை, டெக் வாய் சந்தை, கிம் மோ ஈரச் சந்தை, தோ பாயோ வெஸ்ட் சந்தை உள்ளிட்ட ஒன்பது சந்தைகளுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்று வந்தது.
முட்டைக்கோசு, லெட்டியூஸ் கீரை ஆகியவற்றின் விலைகளும் கூடியுள்ளன. இவை பெரும்பாலும் மலேசிய பண்ணைகளிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டுவரப் படுகின்றன.
காய்கறி கடைக்காரர்கள் பலர் விலைகள் கூடியதற்கு, மலேசியாவில் பெய்யும் கனமழைதான் காரணம் என்றனர்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள், பரிசோதனைகள், ஆகியவற்றுடன் ஜூன் முதல் தேதியிலிருந்து மலேசியாவில் நடப்பில் உள்ள பொதுமுடக்கத்தால் பண்ணைகளில் ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்டவையும் காய்கறி விலை அதிகமானதற்கு மற்ற காரணங்களாகக் கூறப்பட்டன.
டெக் வாய் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ஆக அதிகமாக 3 வெள்ளிக்கு விற்கப்பட்டது. மலேசியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட ஜூன் முதல் தேதிக்கு முன்பு, அங்கு ஒரு கிலோ தக்காளி $1 முதல் $1.50 வெள்ளி வரைக்கும் விற்கப்பட்டது. தெக் வாய் சந்தையில் முட்டைகோசின் விலை ஆக அதிகமாக உயர்ந்திருந்தது. முன்னதாக $3.50 வெள்ளிக்கு விற்ற முட்டைக்கோசு இப்போது $5 வெள்ளிக்கு விற்கப்படுகிறது.
மலேசிய எல்லையில் உடல்வெப்பநிலைச் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. லாரி ஓட்டு நர்களுக்கான உடல்வெப்ப நிலைச் சோதனையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், லாரிகள் திரும்ப அனுப்பப்படுகின்றன. அதனால் தங்களுக்கு காய்கறி வரத்து குறைவாகவும் அதனாலும் தாங்கள் காய்கறிகள் விலையை உயர்த்தியதாக சில காய்கறிக் கடைக்காரர்கள் கூறினார்கள்.
கேமரன் மலையில் அண்மையில் கூடுதல் மழை பொழிந்து வருகிறது. இது வழக்கமாக இக்காலகட்டத்தில் காணாத ஒன்று, என்றார் சிங்கப்பூர் காய்கறி ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர் சங்கத்தின் துணைச் செயலாளர் ஜெரி டான்.
இவ்வேளையில் கடல் உணவு வகைகள், முட்டை, கோழி ஆகியவற்றின் விலைகளில் அதிக மாற்றம் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் ஹலால் கோழி விற்பனையாளர்கள் சிலர் கோழி விலைகள் ஐந்து முதல் ஏழு விழுக்காடு வரை அதிகமாகியுள்ளதாகக் கூறினர். ஆனால் அவற்றின் விலையை தாங்கள் உயர்த்தவில்லை என்று டெக் கீ சந்தை அருகே உள்ள அமீனா ஹலால் கோழிக் கடையை நடத்தும் திரு நோர்மான் ஃபிர்தவுஸ் சொன்னார்.
பேரங்காடிகளைப் பொருத்தமட்டும் காய்கறிகளின் விலையில் மாற்றம் இல்லை என ஃபேர்பிரைஸ், ஷெங்சியோங் பேராங்காடிகள் தெரிவித்தன. உணவு விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க, பல இடங்களிலிருந்து காய்கறிகளைப் பெறுவதாக அவை கூறின.
சிங்கப்பூரில் உணவு விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய, உணவைத் தருவிப்பது, உள்ளூரில் உற்பத்தி உட்பட பல வழிகளை மேற்கொள்வதாக சிங்கப்பூர் உணவு அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

