மரணம் விளைவிக்கக்கூடிய ஆயுதத்துடன் கலவரத்தில் ஈடுபட்டதன் சந்தேகத்தின் பேரில் போலிசார் ஏழு ஆடவர்களைக் கைது செய்துள்ளனர். ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் கும்பல் ஒன்று, மூன்று இளையர்களைத் தாக்குவதாக இம்மாதம் 11ஆம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. கும்பலில் இருந்த ஒருவர், 'கரம்பிட்' கத்தியைக்கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்கப்பட்டவர்களில் 14, 15 வயதுகளுடைய இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்டோரின் அடையாளத்தை குற்றவியல் புலனாய்வுப் பிரிவு, மத்திய போலிஸ் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து நேற்று முன்தினம் அவர்களைக் கைதுசெய்தனர்.
தாக்குதல் நடத்திய கும்பலைத் தாக்கப்பட்டவர்கள் முன்னரே அறிந்திருந்தனர் என்றும் வாக்குவாதம் பின்னர் தாக்குதலானது என்றும் ஆரம்பக்கட்ட விசாரணை கூறுகிறது. இன்று ஐவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும்.