புக்கிட் மேரா வியூ புளோக் 116ல் உள்ள கடைக்காரர்கள் 85 பேருக்கு கட்டாய கொவிட்-19 பரிசோதனை நேற்று காலை தொடங்கியது.
கிருமி பரிசோதனைக்காக புளோக் 125ஏயில் தற்காலிக பரிசாதனைக்கூடம் அமைக்கப்பட்டது.
புளோக் 115ல் உள்ள புக்கிட் மேரா வியூ சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்தில் புதிய கொவிட்-19 கிருமித் தொற்றுக் குழுமம் உருவாகியுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. அங்கு தற்போது ஆறு கிருமித் தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
கிருமித் தொற்றுகளைத் தொடர்ந்து அங்குள்ள 182 கடைகளும் சுத்தம் செய்யும் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன. இன்று வரை பணிகள் நடைபெறும்.
சந்தையில் மே 25 முதல் பணியாற்றி வந்த ஊழியர்கள் எல்லாரும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனைகள் நடைபெறவுள்ளன.
அருகில் உள்ள புளோக் 116இல் இருக்கும் கடைகளில் மே 25லிருந்து பணியாற்றிய எல்லாருக்கும் கிருமி பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
"இன்னும் அதிகமான, கண்டறியப்படாத கிருமிப் பரவலைத் தடுத்து நிறுத்துவது அதன் நோக்கம்," என்று சுகாதார அமைச்சு கூறியது.
தற்காலிகக் கூடத்தில் பரிசோதனைக்காகச் சென்ற கடைக்காரர்கள் பலரும் கிருமித் தொற்றி யிருக்கக் கூடும் எனும் அச்சம் இல்லை எனக் கூறினர்.
பரிசோதனை செய்துகொள்வது இப்போது இயல்பான ஒன்றாகிவிட்டதாகச் சொன்னார், சோதனையை மேற்கொண்ட உணவங்காடிக் கடைக்கரர் திரு தான்.
அத்துடன், 115 புக்கிட் மேரா வியூ சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்துக்கோ அருகில் உள்ள புளோக் 116ல் உள்ள கடைகளுக்கோ மே 25 முதல் ஜூன் 12 வரையில் சென்ற குடியிருப்பாளர்களும் பொதுமக்களும் இலவசமாகப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளலாம் என்றும் அமைச்சு கூறியிருந்தது.
ஆனால் இவர்களுக்கான பரிசோதனைகள் புளோக் 125ஏயில் உள்ள தற்காலிகக் கூடத்தில் நடைபெறவில்லை. இவர்கள் புக்கிட் மேரா பலதுறை மருந்தகத்துக்கோ பரிசோதனை வசதிகள் உள்ள அருகில் உள்ள மருந்தகங்களுக்கோ செல்லலாம்.
பரிசோதனைகளுக்காக புளோக் 125ஏயில் உள்ள தற்காலிகக் கூடத்துக்குச் சென்ற குடியிருப்பாளர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டதால் அதிருப்தி அடைந்தனர்.
தற்காலிகக் கூடத்துக்கு நேற்று சென்றிருந்த தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா, அருகில் உள்ள இடங்களில் கிருமிப் பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யும்படி குடியிருப்பாளர்கள் தம்மிடம் கேட்டுக்கொண்டதாகவும் அது பற்றி சுகாதார அமைச்சிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.