ஃபிஜி, இஸ்ரேலிய பயணிகளுக்கு தனிமை உத்தரவில் மாற்றங்கள்
ஃபிஜியில் கொவிட்-19 பரவல் மோசமாகி வருவதால் அங்கிருந்து இங்கு வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
கடந்த 21 நாளில் ஃபிஜிக்கு சென்று வந்த பயணிகள் இனி குறிப்பிட்ட தங்கும் இடங்களில் 21 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
முன்னதாக ஃபிஜியிலிருந்து வந்த பயணிகள் 14 நாட்கள் குறிப்பிட்ட தங்கும் இடங்களிலும் 7 நாட்கள் இல்லத்தில் அல்லது வேறு தங்கும் இடத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. புதிய மாற்றம் நேற்று நடப்புக்கு வந்தது.
இவ்வேளையில் நாளை 16ம் தேதி 11.59 மணி முதல், இஸ்ரேலிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் குறிப்பிட்ட தங்கும் இடங்களில் 14 நாட்களும் இல்லத்தில் அல்லது வேறு தங்கும் இடத்தில் 7 நாட்களும் தங்கலாம் என்று சுகாதார அமைச்சு நேற்று கூறியது.
இஸ்ரேலில் கொவிட்-19 பரவல் மேம்பட்டு வருவதே அந்த தளர்வுக்குக் காரணம்.
ஊழியருக்கு தொற்று; தாதிமை இல்லத்தில் கிருமி நாசினி தெளிப்பு
ஹவ்காங்கில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் தாதிமை இல்லத்தில் ஊழியர் ஒருவருக்குக் கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று அங்கு சுத்திகரிப்புப் பணிகளும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்றன.
தாதிமை இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான கிருமிச் சோதனைகளின்போது, துணைத் தாதியாகப் பணியாற்றிய 23 வயது இந்தியக் குடிமகனுக்கு கிருமித்தொற்று, கடந்த 11ம் தேதி வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் அன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு பரிசோதனை அவருக்கு தொற்று இல்லை என்று காட்டியது. மறுநாள் ஊழியருக்கு மீண்டும் கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு ஏற்கனவே ஏற்பட்ட கிருமித்தொற்றின் எச்சம் உடலிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கலாம் என்றும் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு கிருமி தொற்றும் அபாயம் இல்லை என்றும் சுகாதார அமைச்சு கடந்த ஞாயிற்றுக் கிழமை கூறியிருந்தது.

