கொவிட்-19 கிருமிக்கு எதிரான எம்ஆர்என்ஏ வகை (mRNA) தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதால் இதய பாதிப்பு ஏற்படும் அபாயம் மிகக் குறைவு என்று மருத்துவ நிபுணர்களைக் கொண்ட மூன்று தன்னிச்சையான அமைப்புகள் கூறியுள்ளன. பொதுநலனைக் கருத்தில் கொண்டு, மக்கள் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்புகள் பரிந்துரை செய்துள்ளன.
மருத்துவர் கழகத்தின் இதயநோய் நிபுணர் பிரிவு, சிங்கப்பூர் இதயநோய் சங்கம், மருத்துவக் கழகம், ஆகியவை அதன் தொடர்பில் நேற்று கூட்டறிக்கை விடுத்தன.
தடுப்பூசிகளால் ஏற்படக்கூடிய அபாயத்தைவிட அவற்றைப் போட்டுக்கொள்ளாததால் ஏற்படக்கூடிய அபாயம் மிக அதிகம் என்று அவை கூறின.
புரதச்சத்தை உருவாக்கும் வழியை உடலுக்குக் கற்றுத் தந்து அதன் வழி தடுப்பாற்றல் ஏற்பட வகை செய்கின்றன எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள். அவற்றைப் போட்டுக் கொண்டதால் இங்கு ஆறு பேருக்கு இதயத் தசையில் அல்லது இதயத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அழற்சி உண்டாது. அவர்களில் நால்வர் 30 வயதுக்கும் குறைவான ஆடவர்கள்.
அவர்கள் தற்போது நலமாய் உள்ளதாகவும் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டதாகவும் சுகாதார அறிவியல் ஆணையம் கூறியிருந்தது.
எம்ஆர்என்ஏ வகை இரண்டாம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும்கைபோது சிலருக்கு, குறிப்பாக 30 வயதுக்கும் குறைந்த ஆண்களுக்கு, இதய அழற்சி ஏற்படும் சிறிய அபாயம் உள்ளதாக இங்கு கிடைக்கப்பெற்ற தரவுகள் கோடிகாட்டுகின்றன.
ஆனால் அத்தகைய சம்பவங்கள் மிகவும் அரிது என்றும் தடுப்பூசி போட்டதால்தான் அழற்சி ஏற்பட்டதா என்பதில் தெளிவு இல்லை என்றும் அதிகாரிகளும் நிபுணர்களும் கூறியுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை, குறிப்பாக இளம் ஆடவர்களை, அதன் பின்னர் முன்னெச்சரிக்கையாக ஒரு வாரத்துக்கு கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சிங்கப்பூரில் அரசாங்கம் மூலம் போடப்பட்டுவரும் ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகள் எம்ஆர்என்ஏ வகை (mRNA) தடுப்பூசிகள் ஆகும்.

